அரசு பேருந்துகளில் ரூ10, ரூ20 நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துநர்களுக்கு...போக்குவரத்து கழகம் வார்னிங்
சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் ரூ10, ரூ20 நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துநர்கள் மீது நடவடிக்கை பாயும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கியால் ரூ10,ரூ20 நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டிருக்கின்றன. ஆனால் ரூ10 நாணயங்கள் செல்லாது என்ற பொதுநம்பிக்கை மக்களிடத்தில் இருந்து வருகிறது.

ரூ10 நாணயம் செல்லும் என அரசு தரப்பு, ரிசர்வ் வங்கி தரப்பில் பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் பொதுமக்களிடம் ரூ10 நாணயம் குறித்த அச்சம் இருந்து வருகிறது. அரசு போக்குவரத்து கழகங்களிலும் கூட ரூ10, ரூ20 நாணயம் பெறுவதற்கு தயக்கம் காட்டப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள், ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடும் ரூ.10, ரூ20 நாணயங்கள் சட்டப்படி செல்லத் தக்கவையாகும். பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் ரூ.10 நாணயங்கள் குறித்து சந்தேகப்படத் தேவையில்லை. அதேநேரத்தில் ரூ10, ரூ20 நாணயங்களை வாங்க மறுக்கும் தனிநபர் மற்றும் கடை உரிமையாளர்கள் மீது ரிசர்வ் வங்கியால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள முடியாது எனவும் கூறியிருந்தது. அத்துடன் நடவடிக்கைக்கு பதிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு தரப்பில், அரசு போக்குவரத்து கழகங்களில் ரூ10 நாணயங்களை கட்டாயம் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை மீறும் நடத்துநர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. தற்போது அரசு போக்குவரத்துக் கழகம் இதே போன்ற மற்றொரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டிருப்பது 14 வகையான நாணயங்கள். இந்த நாணயங்களை பெற மறுப்பது சட்டப்படி குற்றம். ஆகையால் அரசு பேருந்துகளி நாணயங்களை பெற மறுத்தால் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் ரூ10, ரூ20 நாணயங்களை கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications