கொரோனாவை தடுக்கும் உணவுகளா.. நம்பாதீங்க.. இதுதான் சிறந்த வழி.. சுகாதாரத்துறை அதிகாரிகள் பதில்
Recommended Video
சென்னை: உண்மையில் கொரோனா வைரஸை தடுக்கும் சக்தி எந்த உணவுக்கும் இருப்பதாக ஆய்வுகளில் எதிலும் நிரூபிக்கப்படவில்லை என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார்கள்.
சீனாவில் இன்று காலை நிலவரப்படி கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. ஒரு நாளில் மட்டும் 1,737 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,711 ஆக அதிகரித்துள்ளது. மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை.
இதனிடையே கொரோனா வைரஸ் குறித்து பதற்றமும் பரபப்பும் தமிழகத்தில் நிலவுகிறது. இந்த சூழலை பயன்படுத்தி இந்த உணவுகளை சாப்பிடுங்கள் அந்த உணவுகளை சாப்பிடுங்கள் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படாது என மருத்துவ குறிப்புகள் அண்மைக்காலமாக பலர் வெளியிடுவது அதிகரித்துள்ளது
இந்தியாவில் முதல் நபர்.. கேரளாவை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.. பரபரப்பு!
காய்கறிகள்
பப்பாளிச் சாறு, பருப்பு ரசம் சாப்பிடுங்க., இஞ்சியை டீ போட்டு குடிங்க, பச்சைக் காய்கறிகள். அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, முருங்கை கீரை சாப்பிடுங்க, வைட்டமின் சி நிறைந்த கொய்யாப்பழம், ஆரஞ்ச், நெல்லிக்காய் போன்றl உணவுகளை சாப்பிடுங்க,..உங்களுக்கு கொரோனா வராது என்று கூறி வருகிறார்கள் ஆனால் உண்மையில் கொரோனா வைரஸை தடுக்கும் சக்தி எந்த உணவுக்கும் இருப்பதாக ஆய்வுகளில் எதிலும் நிரூபிக்கப்படவில்லை என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார்கள்.
மருத்துவ பலன்
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில். ``சோசியல் மீடியாவில் கொரோனாவைத் தடுக்க பப்பாளிச் சாறு சாப்பிடுங்க, மிளகு சாப்பிடுங்க, பருப்பு ரசம் சாப்பிடுங்க என்றெல்லாம் வருகிறது. உண்மையில் கொரோனாவுக்கு எந்த அளவுக்குத் தடுப்பு மருந்தாக இருக்கும் என்பது கேள்விக்குறிதான். மேலே சொன்ன அனைத்து உணவுகளுமே பொதுவான அளவில் நல் மருத்துவப் பலன்கள் கொடுக்க கூடியவை தான்.
தெரியவில்லை
எனினும் அந்த உணவுகளால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியுமா என்பதற்கு தெளிவான விடை இல்லை. மருத்துவரீதியாக, `இந்த உணவு கொரோனாவைத் தடுக்கும்' என்பது எதுவும் ஆதாரபூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.எனவே மக்கள் இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம். கொரோனாவைத் தடுக்க, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வதுதான் மிகச்சிறந்த வழி" என்றார்கள்.
28 நாட்கள் தீவிர கண்காணிப்பு
இதனிடையே சீனாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை உரிய பாதுகாப்பு முறையால் மருத்துவ பணியாளர்கள் தீவிர சோதனை செய்து வருகிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். 68 பேர் இதுவரை சீனாவிலிருந்து தமிழகம் வந்துள்ளார்கள். அவர்கள் அனைவரையும், அடுத்த 28 நாள்களுக்குத் தனிப்பட்ட முறையில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்ககப்படுவார்கள்" , தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.