வெள்ளை அறிக்கை கேட்ட இ.பி.எஸ்.. செம்ம பதிலடி கொடுத்து.. மாஸ் காட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 36,000-க்கு மேல் சென்ற கொரோனா தொற்று தற்போது 2,500-க்கு கீழ் சென்று விட்டது. தமிழ்நாட்டில் மக்களுக்கு தடுப்பூசிகள் போடும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மத்திய அரசு அனுப்பி வரும் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு உடனுக்குடன் பிரித்து அனுப்பப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால ஒரு சில மையங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதையும் காண முடிகிறது.

பரபரப்பு அறிக்கை
தமிழ்நாட்டில் மத்திய அரசு போதிய அளவு தடுப்பூசிகள் அனுப்பி வரும் நிலையில் அவை முறையாக மக்களுக்கு செலுத்தப்படவில்லை என்றும் கொரோனா உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் தமிழ்நாடு அரசு குறைத்து காட்டி வருவதாக எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி தொடர்பாக தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

முறையாக செலுத்தப்பட்டதா?
''இரண்டு நாட்களுக்கு முன்பு 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பியதாகச் செய்திகள் வந்தன. ஆனால், அவை முறையாக மக்களுக்குச் செலுத்தப்பட்டதாகத் தகவல்கள் இல்லை. தமிழகத்திற்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதுவதோடு மட்டும் நிற்காமல் அழுத்தம் கொடுத்து தடுப்பூசி பெறுவதற்கான முயற்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளை அறிக்கை வெளியிடனும்
பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்த முன்வருவதைத் தவிர்க்க, கடந்த 15 நாட்களாகத் தொற்று எண்ணிக்கையையும், இறப்பையும் திமுக அரசு குறைத்துக் காட்டுவதாகச் செய்திகள் வருகின்றன.மத்திய அரசால் தமிழ்நாட்டிற்குக் கடந்த இரண்டு மாதத்தில் எத்தனை லட்சம் தடுப்பூசிகள் தரப்பட்டது? அவை எத்தனை பேருக்குப் போடப்பட்டது? மத்திய அரசிடமிருந்து வரும் தடுப்பூசிகள் மாவட்டங்கள் தோறும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பது பற்றியும், தடுப்பூசி முகாமில் யார் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது பற்றியும், திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறி இருந்தார்.

வெளிப்படைத் தன்மை
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- தடுப்பூசிகள் போடும் பணியில் தமிழ்நாடு அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. தினமும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த விவரம் தொடர்பாக தினமும் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி பார்க்கவில்லையா?
இவ்வாறு தடுப்பூசி தொடர்பான விவரம் தினமும் பகிரப்பட்டு வருவதை பார்க்காமல் எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ள்ளார். தடுப்பூசி தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுள்ளார். தடுப்பூசி விவரத்தில் நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்வதால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தடுப்பூசிகள் தொடர்பான வெள்ளை அறிக்கை வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்படும் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications