பொய் வழக்குப்பதிவு செய்து தம்பதியை மிரட்டிய போலீஸ்.. ரூ.3 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணையம்
சென்னை: பொய் வழக்குப்பதிவு செய்து தம்பதியை மிரட்டிய திருச்சி நாவல்பட்டு காவல் நிலையத்தினருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியை அடுத்த திருவெறும்பூரை சேர்ந்தவர் கோபால். இவர் அதே பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்திருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு நாவல்பட்டு காவல் நிலைய போலீசார் அந்த கடைக்கு வந்தனர்.

நடவடிக்கை எடுக்கவில்லை
அந்த கடையையும், வீட்டையும் காலி செய்ய சொல்லி மிரட்டியதுடன், கோபால் மீதும், அவரது மகன் மீதும் பொய் வழக்கு தொடரப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோபாலின் குடும்பத்தினர்
திருவெறும்பூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். ஆனால் இது தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மற்றொரு பொய் வழக்கு
இதனை தொடர்ந்து கோபாலின் மனைவி அமுதா மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் டி.எஸ்.பி.யிடம் புகார் அளித்த அன்றே நவநீதகிருஷ்ணன் என்பவர் தாக்கியதால், அவர் மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததால் தன் மீதும், கணவனர் மீதும் மற்றொரு பொய் வழக்கு பதியப்பட்டது என்று குறிப்பிட்டார்.

மிகவும் கண்டிக்கதக்கது
இந்த மனு மாநில மனித உரிமை ஆணைய ஆணையத் தலைவர் சித்தரஞ்சன் மோகந்தாஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ''கோபால் குடும்பத்தினர் மீது காவல்துறையின் மனித உரிமை மீறலில்.ஈடுபட்டது நிரூபணமாகி உள்ளது. காவல்துறையினரின் இந்த செயல் மிகவும் கண்டிக்கதக்கது. இது முற்றிலும் தவறானது.

தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவு
எனவே அமுதாவிற்கு இழப்பீடாக ரூ.3 லட்சத்தை காவல்துறையினர் வழங்க வேண்டும். 8 வாரங்களில் இந்த இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். தம்பதி மீது மனித உரிமை மீறலில்.ஈடுபட்ட காவல் நிலையத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications