வருங்கால முதல்வரே.. இப்போ நிரூபணம் ஆகிடுச்சு.. கிண்டலடித்த செந்தில்குமார் எம்பி.. யாரை சொல்கிறார்?
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கும் நிலையில் திமுக எம்பி செந்தில்குமார் தேர்தல் முடிவுகள் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக, பாமக, நாம் தமிழர் என்று இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பன்முக போட்டி நிலவியது. மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய பதவிகளை தேர்வு செய்ய இந்த தேர்தல் நடந்தது.
தோட்டம் அதிருமா?.. திமுகவுக்கு மெசேஜ் தருவாரா ராமதாஸ்.. பலத்தை காட்டுமா பாமக.. செம எதிர்பார்ப்பு
பாமக
காலையில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக கட்சி மாபெரும் தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 140 இடங்களில் திமுக 131 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பாமக ஒரு மாவட்ட கவுன்சிலர் இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை.
முன்னிலை இல்லை
ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 1380 இடங்களில் திமுக 375 இடங்களிலும், அதிமுக 35 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பாமக 7 இடங்களில் மட்டுமே ஒன்றிய கவுன்சிலருக்கான தேர்தலில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது.
ஏன் தனித்து போட்டி?
தேர்தல் நடந்த 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வடமாவட்டங்கள். பாமக வலுவாக இருக்கும் மாவட்டங்கள் என்பதால் இங்கு பாமக தனித்து போட்டியிட முடிவு செய்தது. பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். வாக்கு வங்கியை உயர்த்தலாம் என்று நம்பி பாமக இங்கே களமிறங்கியது. ஆனால் பாமக எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய சறுக்கலை அக்கட்சி வடமாவட்டங்களில் சந்தித்து உள்ளது.
விமர்சனம்
இந்த நிலையில்தான் திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் பாமகவை விமர்சனம் செய்து ட்வீட் செய்துள்ளார். நேரடியாக பாமகவை குறிப்பிடாமல் செந்தில்குமார் எம்பி விமர்சனம் செய்துள்ளார். செந்தில்குமார் எம்பி செய்துள்ள ட்வீட்டில் உள்ளாட்சியில் திமுக வெற்றி பெற்ற நற்செய்தியை விட ஒரு கட்சி தன் செல்வாக்கை 7 வடமாவட்டங்களில் நிரூபிக்க போட்டி போட்டு வெற்றியை இழந்து நிக்கிறது.
செந்தில்குமார்
இந்த நிலையில் திமுக மட்டும் தான் அனைத்து சமுதாயத்திற்கும் ஆன கட்சி என்று நிரூபணமாகியுள்ளது. இது முதல் அமைச்சர் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. ஏழு வடமாவட்டங்களில் தனித்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வருங்கால முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கிண்டல்
இது உங்களுக்கு கிடைத்த வெற்றி, என்று பாமகவையும், எம்பி அன்புமணி ராமதாஸையும் கிண்டல் செய்யும் வகையில் செந்தில்குமார் எம்பி பாமக பெயரை குறிப்பிடாமல் ட்வீட் செய்துள்ளார். அதோடு திமுக மட்டும் தான் அனைத்து சமுதாயத்திற்கும் ஆன கட்சி என்று நிரூபணமாகியுள்ளது என்றும் அனைத்து சமூக ரீதியான வாக்கு வங்கி குறித்தும் செந்தில்குமார் ட்வீட் செய்துள்ளார்.