9 மாவட்டங்களில் 7ல் "க்ளீன் ஸ்வீப்".. மாவட்ட கவுன்சிலர் பதவிகளை அள்ளியது திமுக.. அதிமுக படுதோல்வி!
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுகதான் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6, 9 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. கடந்த 6ஆம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.37% வாக்குகள் பதிவாகின. 2ஆம் கட்ட தேர்தலில் 78.47% வாக்குகள் பதிவாகி இருந்தன.
காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள்தான் தற்போது வெளியாகி வருகின்றன.

என்னென்ன பதவிகள்
மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் , பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளை தேர்வு செய்ய இந்த தேர்தல் நடந்தது. இதில் முக்கியமான் பதவிகளான மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இரண்டு பதவிக்கான தேர்தலிலும் திமுகதான் முன்னிலை வகித்து வருகிறது. சில மாவட்டங்களில் அதிமுக ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியை கூட பெறவில்லை.

மாவட்ட கவுன்சிலர்
அதன்படி 9 மாவட்டங்களில் 7 மாவட்டத்தில் திமுகதான் மாவட்ட கவுன்சிலர் பதவியை மொத்தமாக வெல்லும் நிலையில் உள்ளது. இந்த 7 மாவட்டங்களில் 1 மாவட்ட கவுன்சிலருக்கான இடத்தில் கூட அதிமுக முன்னிலை வகிக்கவில்லை. காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் திமுகதான் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான அனைத்து இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

7 மாவட்டங்கள்
இந்த 7 மாவட்டங்களில் ஒன்றில் கூட அதிமுக மாவட்ட கவுன்சிலர் போஸ்டில் முன்னிலை பெறவில்லை. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரத்தில் 11 மாவட்ட கவுன்சிலர் பதவி உள்ளது. இது அனைத்திலும் திமுக முன்னிலை பெற்றுள்ளது. வேலூரில் உள்ள அனைத்து 14 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.

ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. திருப்பத்தூரில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. பாமக வலுவாக இருக்கும் என்று கருதப்பட்ட கள்ளக்குறிச்சியில் உள்ள 19 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. திருநெல்வேலி 12 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.

அதிமுக முன்னிலை நிலவரம்
தென்காசி 14 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. விழுப்புரத்தில் 28 மாவட்ட கவுன்சிலர் பதவியில் 27ல் திமுக, 1ல் அதிமுக முன்னிலை வகிக்கிறது. செங்கல்பட்டில் 16 மாவட்ட கவுன்சிலர் பதவியில் 13ல் திமுக, 1ல் அதிமுக முன்னிலை வகிக்கிறது. இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டுமே அதிமுக தலா ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் முன்னிலை வகிக்கிறதே தவிர வேறு எங்கும் முன்னிலை வகிக்கவில்லை.

மொத்த விவரம்
மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. மொத்தமாக அதிமுக வாஷ் அவுட் ஆகும் அளவிற்கு மாவட்ட கவுன்சிலர் பதவியில் தோல்வி அடைந்துள்ளது. மொத்தமாக 140 மாவட்ட கவுன்சிலர் பதிவிக்கான இடங்களில் திமுக 136 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. செங்கல்பட்டில் மட்டும் இரண்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான முன்னணி விவரங்கள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications