வி.ஐ.பி.க்களை கண்டதும் எழுந்து நின்ற தேர்தல் அலுவலர்கள்! வாக்குப்பதிவு மையங்களில் நடந்த ருசிகரம்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தமிழகமெங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு இடங்களில் சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.
ஓட்டுப்போட வரும் அரசியல் கட்சி வி.ஐ.பி.க்களை கண்டதும் ஆட்டோமெட்டிக்காக அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் எழுந்து நின்று பவ்யம் காட்டும் நிகழ்வுகளை பரவலாக காண முடிகிறது.
அதேவேளையில் மற்ற வாக்காளர்களிடம் கண்டிப்பும், கறாரும் காட்டுவதை வாக்குப்பதிவு மைய அலுவலர்களிடம் காண முடிகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழகத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிவிட்டதால் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க திரண்டு வருகின்றனர். லட்சக்கணக்கான வாக்காளர்கள் முதல் முறை ஓட்டுப்போடும் உரிமையை பெற்றிருக்கின்றனர். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் உள்ளாட்சித் தேர்தல் வித்தியாசமானது என்பதால் வாக்குப்பதிவு மையங்களில் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை.

முக்கியப் பிரமுகர்கள்
அரசியல் கட்சித் தலைவர்கள், உள்ளூர் முக்கியப் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பல தரப்பட்டோரும் தங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்போட்டு வருகின்றனர். அவ்வாறு அவர்கள் வாக்களிக்க வரும் போது அங்கிருக்கும் வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் ஆட்டோமெட்டிக்காக எழுந்து நின்று தங்களையும் மறந்து பவ்யம் காட்டுவதை பரவலாக காண முடிகிறது. தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்தவர்களை நேரில் அதுவும் அருகில் பார்ப்பதாலோ என்னவோ அவர்கள் இவ்வாறு பதற்றம் அடைகின்றனர்.

வாக்குப்பதிவு மையம்
அதேவேளையில் யார் வந்தால் நமக்கென்ன நமது பணியை ஆற்றுவோம் என்கிற வகையில் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் சலனமின்றி தங்கள் கடமையை ஆற்றி வருகின்றனர். உதாரணத்துக்கு புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி வாக்களிக்க சென்ற போது அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் அலுவலர் ஒருவர் அமர்ந்தவாறு அவருக்கு ஸ்லீப் கொடுத்ததும் விரலில் மை வைத்ததும் கவனிக்கத்தக்கது.

அவசியம் இல்லை
வாக்குப்பதிவு மையத்தில் தேர்தல் அலுவலர்களாக பணியாற்றக்கூடியவர்கள் யாருக்கும் எழுந்து நிற்க வேண்டும் என்பது அவசியமில்லை. வயது முதிர்ந்தவர்கள் வந்தால் அவர்களுக்கு உதவும் வகையில் எழலாமே தவிர, சினிமா பிரபலங்களுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பவ்யம் காட்டத் தேவையில்லை என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications