10 ஆண்டில் ரூ.60,000 கோடி! உலகின் பணக்கார கட்சியா பாஜக? பிரியங்கா கையில் ஏடிஆர் ரிப்போர்ட்!
சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் உலகின் பணக்காரக் கட்சியாக பாஜக எப்படி மாறியது. 55 ஆண்டுகளில் காங்கிரஸால் அதைச் செய்ய முடியவில்லை என்று இமாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கிடுக்குப் பிடிக் கேள்வியால் பாஜக பதில் சொல்ல முடியாமல் வாய்மூடி மவுனம் கடைப்பிடித்து வருகிறது.

2024 மக்களவைத் தேர்தலுக்கான 7 ஆம் கட்ட தேர்தல் ஜூன் 1 அன்று நடைபெற உள்ளது. மொத்தம் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இத்தேர்தல் நடைபெறுகிறது.
இதுவே கடைசிக் கட்டத் தேர்தல். ஆகவே அதற்காகப் பிரச்சாரம் 8 மாநிலங்களில் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.
இமாச்சலப்பிரதேசத்தின் சம்பாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் 'நியா சங்கல்ப் சபா'வில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, பாரதிய ஜனதா கட்சி 10 ஆண்டுகளில் உலகின் பணக்காரக் கட்சியாக மாறியுள்ளதாகக் கூறினார்.
ஆனால் கடந்த 55 ஆண்டுகளாக நாட்டை ஆண்டுவந்த காங்கிரஸ் கட்சியால் கூட இதைச் சாதிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
"காங்கிரஸ் 55 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த போதிலும், உலகின் பணக்கார கட்சியாக ஆக முடியவில்லை. வெறும் 10 ஆண்டுகளில் உலகின் பணக்கார கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.
இது எப்படி நடந்தது? இந்தப் பணம் எல்லாம் எங்கிருந்து வந்தது? இது யாருடைய பணம்?'' என்று பிரியங்கா காந்தி பாஜகவைத் தாக்கி இருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த சில ஆண்டுகளில் பாஜக ரூ.60,000 கோடி செலவு செய்துள்ளதாக ஒரு அறிக்கை மூலம் தெரியவருகிறது.

அப்புறம் எப்படி இவர்கள் காங்கிரஸ் கட்சியினரை ஊழல்வாதிகள் என்கிறார்கள்? அதுதான் புரியவில்லை. பாஜகவினர் கடவுளின் பெயரால் ஓட்டு கேட்கிறார்கள்.
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று எந்தக் கடவுள் வந்து சொல்வார்? எல்லா கடவுள்களும் மகான்களும் பெரிய பெரிய ஆளுமைகளும் சத்தியத்தின் பாதையில் மட்டுமே செல்லச் சொல்லி இருக்கிறார்கள்.
இமாச்சலப்பிரதேச மக்கள் சத்தியத்தின் பாதையில் நடப்பவரைத்தான் அங்கீகரிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
பாஜகவுக்குப் பணம் "கோடீசுவரர்களிடமிருந்து வருகிறது" என்று குற்றம் சாட்டிய பிரியங்கா காந்தி, "பாஜக ஆட்சியில் நீடிக்க மட்டுமே விரும்புகிறார்கள், ஆட்சியில் நீடிக்க எதையும் செய்வார்கள்.

இந்த ஆட்சியின் விளைவுதான் அக்னிவீர் திட்டம். இவர்களுக்குப் பணம் பில்லியனர்களிடமிருந்து வருகிறது, எனவே அவர்கள் இந்த கோடீசுவரர்களுக்காக மட்டுமே திட்டங்களை உருவாக்கியுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகள் கோடீசுவரர்களை இலக்காகக் கொண்டவை என்றும், பாஜகவால் அவர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய முடியும் என்றும், ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பணம் இல்லை என்று கூறுகிறார்கள்.

பிரதமர் மோடி தொடங்கி அனைத்து பாஜக தலைவர்களும் ஒரே ஒரு நோக்கத்திற்காக மட்டுமே செயல்படுகிறார்கள். அதாவது எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும். இதுதான் ஒரே கொள்கை என்று பிரியங்கா காந்தி பேசி இருந்தார்.
2020-21 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் 8 தேசியக் கட்சிகள் அறிவித்த சொத்து மதிப்பு ரூ.7,297.61 கோடியாக இருந்தது. இது 2021-22ஆம் நிதியாண்டில் ரூ.8,829.15 கோடியாக அதிகரித்துள்ளது என்று ஏடிஆர் அறிக்கை சொல்கிறது.
Association for Democratic Reforms என்றதன் சுருக்கம்தான் இது. இதனைத் தமிழில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்று சொல்லலாம்.

இதே அமைப்பின் 2020-21 ஆம் ஆண்டு அறிக்கையின்படி பாஜகவின் அறிவிக்கப்பட்ட சொத்து மதிப்பு ரூ.4,990.19 கோடி. இது 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் சுமார் 21.17% அதிகரித்து ரூ.6,046.81 கோடியாக உயர்ந்துள்ளது.
இதேபோல காங்கிரஸின் அறிவிக்கப்பட்ட சொத்து 2020-21 நிதியாண்டில் மொத்தம் ரூ.691.11 கோடியாக இருந்தது. இது 2021-22ல் 16.58% அதிகரித்து ரூ.805.68 கோடியாக அதிகரித்திருந்தது.

இந்த அறிக்கையைச் சுட்டிக் காட்டித்தான் பிரியங்கா காந்தி பாஜகவை விமர்சித்துள்ளார்.
இந்த ஏடிஆர் அமைப்பு அரசியல்வாதிகளைப் பற்றிப் பல ஆய்வுகளைச் செய்து வெளியிட்டு வருகின்றது. இந்தத் தேர்தலில் கூட பணக்கார வேட்பாளர்கள் யார் ? வேட்பாளர்களின் கல்வித் தகுதி என்ன? போன்ற பல தரவுகளைத் திரட்டி அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications