திரிணாமுல் வேட்பாளரின் நிறவெறி தாக்குதல்! பொங்கி எழுந்த 30 வயது இளம்புயல் தார்! யார் இவர்?
சென்னை: மேற்குவங்க அரசியலில் புயலைக் கிளப்பி இருக்கிறார் திப்சிதா தார். யார் இவர்? இந்தளவுக்கு இவர் பிரபலமடைய என்ன காரணம்?
இந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள செரம்பூர் தொகுதி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்குக் காரணம், இங்கே வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள திப்சிதா தார்.

வெறும் 30 வயதே நிரம்பிய இளம் தலைமுறை வேட்பாளர். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் பிறந்த இவர்தான் இன்றைக்கு அந்த மாநிலத்தில் ஸ்டார் வேட்பாளர்.
இவரை சிபிஐ(எம்) கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. 5 ஆம் கட்டமாக நடைபெற்றும் மக்களவைத் தேர்தலில் இன்று இவரது தொகுதியில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
கடந்த 15 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரசின் கோட்டையாகக் கருதப்படும் செரம்பூர் தொகுதியின் எம்பி ஆக இருந்து வரும் கல்யாண் பானர்ஜியை எதிர்த்து இவர் போட்டியிடுகிறார்.
இந்த செரம்பூர் தொகுதியை 1951 முதல் தொடங்கி 1996 வரை காங்கிரஸ் கட்சியும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. அப்படி இந்த இரண்டு கட்சிகளில் செல்வாக்கை உடைத்து முதல் வெற்றியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குப் பெற்றுத் தந்தார் அக்பர் அலி கோண்ட்கர். இவர் மூலம் இந்தத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் 1998இல் முதல் கொடியே ஏற்றியது.

அதன்பிறகு 2009 முதல் 2019வரை கல்யாண் பானர்ஜிதான் திரிணாமுல் கட்சியின் எம்பி ஆக இருந்து வருகிறார். இவர் செல்வாக்கு மிக்க எம்பி. உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் கூட. 67 வயதான இவரை எதிர்த்துத்தான் திப்சிதா தார் போட்டியிட்டுள்ளார்.
மாநிலத்தில் ஆட்சி அதிகாரமும் பதவியும் இருப்பதால், தனி நபர் தாக்குதலை நடத்தும் அளவுக்கு கல்யாண் பானர்ஜி இறங்கி இருப்பதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது.
அதாவது சிபிஐ(எம்) வேட்பாளரான தாரின் நிறம் குறித்து மிக மோசமான தாக்குதலை நடத்தியுள்ளார் கல்யாண். தார் மிகவும் கருப்பாக இருப்பதால்தான் மாலை ஆறு மணிக்கு மேல் எந்தத் தேர்தல் பிரச்சாரத்தையும் சிபிஐ(எம்) ஒருங்கிணைக்கவில்லை.
அப்படி அவர் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கலந்துகொண்டால், ஆள் அடையாளம் காண்பது கடினம். அந்தளவுக்கு அவர் தோல் கருப்பாக உள்ளது என்று விமர்சித்துள்ளார் கல்யாண். இவரது பேச்சு இப்போது அங்கே மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
திப்சிதா தார் மார்சிஸ்ட் கட்சியின் நட்சத்திர வேட்பாளர் மட்டுமில்லை. இவர் நாடு முழுவதும் அறியப்பட்ட ஆக்டிவிஸ்ட். அவர் ஜேஎன்யூவில் படித்தவர். படித்த காலத்தில் மாணவர்கள் சங்கத்தில் தீவிரமாக இயங்கியவர்.
கன்னையா குமாருடன் இணைந்து செயல்பட்டவர். ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவுக்கு நீதி கேட்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டவர். பிஹெச்டி படிக்கும் காலத்தில் 2015ல், ஜேஎன்யு மாணவர் சங்கத்தில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு, இறுதியில் தோல்வியைத் தழுவியவர்.

ஆகவே, அவருக்குக் கட்சி தாண்டிய நாடு முழுவதும் ஆதரவாளர்கள் இருக்கின்றன. இப்படி நாடறிந்த ஒரு வேட்பாளரைத்தான் 'கறுப்பி' என பொருள்படும் படி நிறவெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார் கல்யாண் பானர்ஜி.
இது குறித்து திப்சிதா தார், " ஒரு பொறுப்புள்ள எம்பியிடம் இருந்து இந்த வார்த்தைகள் வருவது கொடுமையானது. அவர் ஒரு வழக்கறிஞர். அப்படி இருந்தும் என் தோல் நிறம் குறித்து தரம் தாழ்ந்த கருத்துகளை வெளிப்படுத்துகிறார். இனவெறி, பாலியல் மற்றும் ஊழல் நிறைந்த நாடாளுமன்ற உறுப்பினரை செரம்பூர் மக்கள் இனி விரும்பவில்லை"என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், "எனக்கு எதிராக கல்யாண் கருத்துச் சொல்வது இது முதன்முறை அல்ல. 2021 சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ(எம்) தன்னை பாலி தொகுதியில் நிறுத்தியபோது, 'ஒரு வேலைக்காரி' என்ற வாசகத்துடன் எனது படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டவர்கள் இவர்கள்" என்கிறார்.
"இது எனக்கு எவ்வளவு இழிவாக இருந்தது என்பதை விட்டுவிடுவோம். வேலைக்காரியாகப் பணி செய்து தங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வரும் ஆயிரக்கணக்கான பெண்களை இந்தச் செயல் இழிவுபடுத்தியுள்ளது" என்று கோபம் கொள்ளப் பேசியுள்ளார் தார்.
தார் அவ்வளவு சுலபமாக வெற்றிபெற்றுவிட முடியாது. அவருக்குக் கடும் போட்டியுள்ளது. ஒரு சில நாட்களில் ஐந்து பொதுக் கூட்டங்கள் வரை தார் உரையாற்றியுள்ளார்.
தார் கலந்துகொண்ட தேர்தல் கூட்டங்கள், பேரணிகளில் மக்கள் அதிகம் பங்கேற்பதைக் காண முடிகிறது. மக்களை அவர் கவர்ந்து ஈர்த்துள்ளார். அவரது பிரச்சாரத்தில் ஐந்தே நாட்களில் 4 லட்சம் தேர்தல் நிதியை அவர் பெற்றுள்ளார்.
இடதுசாரிகள் மதம் மற்றும் இந்து தெய்வங்கள் மீது வெறுப்பு கொண்டவர்கள் என்ற கட்டுக்கதையைத் தகர்த்து எறிவதற்காக இவர் ஏற்கனவே இரண்டு முறை செரம்பூரில் உள்ள மகேஷில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்.
இந்த மாற்றங்கள் அவருக்கு உதவும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. கல்யாண் கடந்த பல ஆண்டுகளாகப் பதவியில் உள்ளதால், அவர் பணத்தைக் கொட்டி செலவு செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications