சென்னையில் மேலும் ஒரு பள்ளி மீது புகார்.. யார் தவறு செய்தாலும் முதல்வர் விடமாட்டார். - அன்பில் மகேஷ்!
திருச்சி: சென்னையில் மேலும் ஒரு பள்ளி மீது புகார் வந்துள்ளது என்றும் யார் தவறு செய்தாலும் முதல்வர் விடமாட்டார் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.

ஆன்லைன் தேர்வு நடக்காது
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- பிளஸ் 2 பொதுத் தேர்வு நிச்சயம் நடைபெறும். கொரோனா தொற்று தமிழக மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இந்த பரவலை கருத்தில் கொண்டுதான் உரிய முடிவு எடுக்கப்படும். பள்ளி மாணவர்களின் எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு உடல் நலமும் முக்கியம். வகுப்பறைக்கு வந்தே மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். ஆன்லைனில் தேர்வு நடத்தப்படாது.

ஆசிரியர்களுக்கு கட்டாயம் கிடையாதுஹ்
ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் வழிமுறைகள் தெரிவிக்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் விசாகா கமிட்டி அமைப்பது குறித்தும், உளவியல் ரீதியாக மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்ட மாட்டார்கள். விருப்பமுள்ள ஆசிரியர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் ஈடுபடலாம்.

மாநில அரசு முடிவு செய்யணும்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எல்லோரும் சிபிஎஸ்சி பள்ளியை மனதில் வைத்துப் பேசினார்கள். தமிழகம் மட்டுமே ஸ்டேட் போர்டு மாணவர்களையும் மனதில் வைத்து பேசி உள்ளோம். தேர்வு தேதியை மாநில அரசின் முடிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.

முதல்வர் விட மாட்டார்
சென்னையில் மேலும் ஒரு பள்ளி மீது புகார் வந்துள்ளது. இது தொடர்பாக அந்த பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான புகார் குறித்து குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யார் தவறு செய்தாலும் முதலமைச்சர் விடமாட்டார். மீண்டும் பப்ஜி விளையாட்டு ஆன்லைனில் தொடர்வதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து சைபர் கிரைம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications