தண்ணீர் தர மறுப்பது எந்தவிதமான மனிதாபிமானம்..கர்நாடகாவை விளாசிய அமைச்சர் துரைமுருகன்.. என்ன நடந்தது?
சென்னை: காவிரி-ஒகேனக்கல் 2-வது குடிநீர் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கு கர்நாடக அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் துரைமுருகன் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் ரூ.35.43 கோடி மதிப்பீட்டில் 591 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், காவிரி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர திமுக மேற்கொண்ட நடவடிக்கையை பட்டியலிட்டார்.

ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2.0
மேலும், இந்த திட்டத்தின் கீழ் குடிநீர் அளவை மேலும் அதிகரிக்கும் வகையில் காவிரி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2-ம் கட்ட பணிகள் ( ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2.0) விரைவில் தொடங்கப்படும் என்றும் ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் விரைவில் துவங்கும்' என்று கூறினார்.

கர்நாடக அமைச்சர் பாய்ச்சல்
தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 'தமிழக அரசு அறிவித்துள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் வருவதால், அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு அதை நிர்வாக மற்றும் சட்ட ரீதியான ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகும்' என்று கோவிந்த் கார்ஜோள் கூறியுள்ளார்.

ஒருதலைபட்சமாக செயல்படுத்த முடியாது
இந்த திட்டத்தை தமிழக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுத்த முடியாது. ஒகேனக்கல் பகுதி கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் கூட்டு எல்லை பகுதியில் இருந்து 64 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ள நிலப்பகுதி வரம்புக்குள் வருகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் 13-வது பிரிவின்படி, இந்த திட்டத்தை என்.எச்.பி.சி (தேசிய நீர்மின் நிறுவனம்) மூலமே செயல்படுத்த முடியும். ஒகேனக்கல் 2-வது கட்ட கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக 2 மாநிலங்களின் எல்லைப்பகுதியை முடிவு செய்வது அவசியமாகும் என்றும் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் தெரிவித்தார்.

கர்நாடகாவுக்கு பதிலடி
ஏற்கனவே 'காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம்' என்று தமிழக அரசுக்கு குடைச்சல் கொடுத்து வரும் கர்நாடகா அரசு, ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திலும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதற்கு தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில்தான் கர்நாடக அமைச்சர் கோவிந்த் கார்ஜோளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் : காவிரி-ஒகேனக்கல் 2-வது குடிநீர் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ள்ளார்.

எந்தவிதமான மனிதாபிமானம்
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட துரைமுருகன் நாட்டின் நீர்வள கொள்கைகளின்படி குடிநீர் தேவைக்குதான் முதலிடம் தரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். குடிநீர் தேவைக்கு தண்ணீர் தர மாட்டோம் என்பது எந்தவிதமான மனிதாபிமானம் என்று தெரியவில்லை என கர்நாடகா அமைச்சரையும் அவர் தாக்கினார். மனிதாபிமான, சட்டப்பூர்வ அடிப்படையில் குடிநீர் திட்டத்தை தொடங்கும் உரிமை தமிழகத்துக்கு உண்டு என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications