அரசு நடத்தும் மகளிர் விடுதிகளில் என்னென்ன வசதிகள்.. எவ்வளவு கட்டணம்.. அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
சென்னை: வெளியூர்களில் சென்று வேலை செய்யும் மகளிருக்காக தோழி தங்கும் விடுதிகள், முன்னேறும் மகளிர் விடுதிகள் என்று அடையாளத்தோடு பெண்கள் தங்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் மகளிர் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு நடத்தும் இந்த மகளிர் விடுதிகளில் என்னென்ன வசதிகள் உள்ளன.. எவ்வளவு கட்டணம் என்பது குறித்து சட்டசபையில் அமைச்சர் கீதாஜீவன் நேற்று விளக்கமாக கூறினார். அதனை பற்றி பார்ப்போம்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில், கோவை மாவட்டம் சூலூர் தொகுதி எம்எல்ஏவான அதிமுகவைச் சேர்ந்த கந்தசாமி மகளிர் தங்கும் விடுதிகள் சூலூர் பகுதிக்கு தேவை என்ற கோரிக்கையுடன் பேசினார். கந்தசாமி எம்எல்ஏ நேற்று சட்டசபையில் பேசுகையில், "சூலூர் தொகுதியில் பல தொழிற்சாலைகள் வந்துவிட்டன. நூற்பாலைகள், என்ஜினீயரிங் தொழிற்சாலைகள் உள்ளன. அதில் அதிகளவு பெண்கள் பணியாற்றுகிறார்கள். பெண்கள் பலர் தனியாக வீடு எடுத்து தங்கக்கூடிய சூழ்நிலை சூலூர் தொகுதியில் அதிகரித்துள்ளது. ஆகையால் அங்கு அரசு மகளிர் விடுதி அமைத்துக் கொடுத்தால் அவர்கள் செலவு குறைந்து வாழ்வாதாரம் காக்கப்படும். அரசு நடத்தும் தங்கும் விடுதிக்கு எவ்வளவு நிதி வசூலிக்கிறீர்கள்.. அங்கு என்ன அடிப்படை வசதி செய்யப்பட்டுள்ளது" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்து பேசுகையில், "தோழி தங்கும் விடுதிகள், முன்னேறும் மகளிர் விடுதிகள் என்று அடையாளத்தோடு பெண்கள் தங்குவதற்காக தமிழகம் முழுவதும் அரசு சார்பில் மகளிர் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை பூ மார்க்கெட் பகுதியில் அரசு மகளிர் விடுதி 50 படுக்கைகள் கொண்ட விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 14 பெண்கள் தங்கி பயன் பெற்று வருகிறார்கள். இந்த விடுதியில் தற்போது மறு சீரமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதேபோன்று கோவையில் மற்றொரு தோழி தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் கூறியப்படி கோவையில் 200 படுக்கைகள் கொண்ட தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவையில் எத்தனை பிஜி : கோவையில் மட்டும் 216 தனியார் விடுதிகள் (பிஜி ஹாஸ்டல்கள்) செயல்பட்டு வருகின்றன. சூலூர் தொகுதியில் தேவை அறிந்து அங்கு மகளிர் விடுதி அமைத்து தமிழக அரசு நிச்சயம் பரிசீலனை செய்யும். இந்த திட்டத்திற்காக 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிஜியில் வசதிகள் என்னென்ன: தமிழகத்தில் உள்ள தோழி விடுதிகளில் பயொமெட்ரிக் முறை உள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அங்கு வைபை வசதி உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், இணையதளத்தின் மூலம் முன்பதிவு, ஹீட்டர் வசதி. தினசரி சுத்தமாக அரை பராமரிப்பு, அவர்களே சமைக்கும் முறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஒரு நாள் இரு நாள் வாடகைக்கும் அறை உள்ளது. சென்னை பொறுத்தவரை தனிநபர் வாடகை 6,500 ரூபாய் உள்ளது. இரண்டு பேர் இருந்தால் 5,500, மூன்று பேர் அல்லது நான்கு பேர் இருந்தால் நாலாயிரத்து ஐநூறு ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.












Click it and Unblock the Notifications