சென்னையில் மீட்பு பணிகள் தீவிரம்.. 160 நிவாரண முகாம்கள் அமைப்பு.. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பேட்டி
சென்னை: கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை பரிதவித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
அதன்பின்பு நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:- சென்னையை பொறுத்தவரை இன்று காலை முதல் மாலை வரை 27.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

160 நிவாரண முகாம்கள்
அதிகபட்சமாக மயிலாப்பூர், அம்பத்தூர் பகுதிகளில் அதிக கன மழை பெய்துள்ளது. அயனாவரம்,எழும்பூர் தண்டையார்பேட்டை, கிண்டியில மழை மிக அதிகமாக இருந்துள்ளது. சென்னையில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக மொத்தம் 160 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு 50 ஆயிரத்து 451 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

விரட்டி வேலை வாங்கி வருகிறார்
நான்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு குழு செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் மற்றொரு குழு திருவாரூர் மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழை நீர் தேங்கி உள்ள பகுதிகளில் மழைநீரை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அமைச்சர்கள் அதிகாரிகளை விரட்டி வேலை வாங்கி வருகிறார்.

மிக அதிகமான கனமழை பெய்யும்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று தெரிவித்துள்ளனர். இந்த மூன்று தேதிகளிலும் மிக அதிகமான கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
எந்தெந்த மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் போது அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களை எச்சரிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

4 பேர் இறந்துள்ளனர்.
தற்போது அதிக மழை பெய்துள்ள மாவட்டம் சென்னை சுற்று உள்ள மாவட்டம்தான்.
இங்கு கடந்த முறை மழை பெய்து எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதோ அந்த அளவுக்கு தற்போதும் பாதித்துள்ளது தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது. இந்த கனமழை காரணமாக 4 பேர் இறந்துள்ளனர். 47 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மேலும் 260 வீடுகள் சேதம் அடைந்து உள்ளது. சென்னை மற்றும் காரைக்காலில் உள்ள பழுதடைந்த ரேடார் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. இவ்வாறு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications