அமைச்சர் கே.என்.நேரு ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்.. வரிசையாக நாசா அப்டேட்ஸ்.. என்னாச்சு?
சென்னை : நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அவரது ட்விட்டர் பக்கத்தில் நாசா குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கத்தில் திடீரென அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பற்றிய பதிவுகள் பகிரப்பட்டன. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
அமைச்சர் நேருவின் ட்விட்டர் பக்கத்தை மீட்கும் வகையில், ட்விட்டர் நிறுவனத்திற்கு திமுக ஐடி விங் சார்பில் புகார் அளிக்கப்பட்டு, மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.
கே.என்.நேரு ட்விட்டர் ஹேக்
சமீபகாலமாகவே அரசியல் பிரமுகர்கள், பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு, தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா பற்றிய பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.
நாசா அப்டேட்ஸ்
அமைச்சர் கே.என் நேருவின் சுயவிவரப் படத்தில் கே.என்.நேருவின் படம் இருந்தது. தற்போது, அந்த புகைப்படமும் நாசா விஞ்ஞானியின் படமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், நாசாவின் புதிய அப்டேட்டுகள் வெளியிடும் பக்கம் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி நாசாவின் புதிய செய்திகள் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளன. கே.என்.நேரு, சேலம் மாவட்டம் ஆத்தூரில் திமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டது பற்றிய புகைப்படங்களை நேற்று பதிவிட்டிருந்தார். அதன் பிறகு நாசாவின் தகவல்கள் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளன.
ஐடி விங்
அமைச்சரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக, ட்விட்டர் நிறுவனத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக திமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாநில செயலாளர் டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். அமைச்சர் கே.என்.நேருவின் குழுவினரால் கையாளப்பட்டு வந்த ட்விட்டர் கணக்கு நேற்றிரவு ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி
கடந்த செப்டம்பர் மாதம் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, கிரிப்டோகரன்சி தொடர்பாக பதிவிடப்பட்டிருந்தது. அவரது ட்விட்டர் கணக்கின் பெயரும் மாற்றப்பட்டது. தொடர்ச்சியாக கிரிப்டோ கரன்சி குறித்து பதிவுகள் வந்ததால் அமைச்சர் செந்தில் பாலாஜியை பின் தொடர்பவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஹேக் செய்யப்பட்ட பல மணி நேரங்களுக்குப் பின்னரே செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.