முதல்வர் போட்ட உத்தரவு.. தமிழகத்தின் 10 முக்கிய கோரிக்கைகள்.. அவசரமாக டெல்லி பறந்த அமைச்சா் மா.சு
சென்னை: நீட் தேர்வு விவகாரம், எய்ம்ஸ் மருத்துவமனை, கூடுதல் தடுப்பூசி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் வலியுறுத்துவதற்காக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்ரமணியன் டெல்லி சென்றுள்ளார்.
Recommended Video
அமைச்சா் மா.சுப்ரமணியன் இன்று காலை 6 மணிக்கு ஏா் இந்தியா விமானம் மூலம் தலைநகர் டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது அவா் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

முதல்வர் உத்தரவு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை இன்று பகல் 2 மணிக்கு டெல்லியில் சந்திக்கிறேன். தமிழகத்தின் மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து வலியுறுத்தப்படும். மேலும், தமிழகத்தில் உள்ள 11 மருத்துவ கல்லூரிகளுக்கு இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி தர வேண்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை உடனே தொடங்கிட வேண்டும் என்பது பற்றியும் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.

நீட் தேர்வு
இது தவிர தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது, மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி ஆதாரம் குறித்தும் வலியுறுத்தப்படும். தமிழகத்தின் தேவைகளுக்கான 10 கோரிக்கைகள் பற்றி பேசப்படும். தமிழகத்தில் ஜுலை, ஆகஸ்டு மாதங்களில் தடுப்பூசி செயல்பாடு சிறப்பாக இருந்ததை பாராட்டி கூடுதல் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் தடுப்பூசி
இந்த செப்டம்பர் மாதத்திற்கு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 1 கோடியே 4 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் மாதம் ஒன்றுக்கு 2 கோடியில் இருந்து இரண்டரை கோடி வரை தடுப்பூசி போடும் வகையில் மருத்துவ கட்டமைப்பு உள்ளது. எனவே இந்த மாதத்திற்கு 2 கோடி தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

சித்தா பல்கலைகழகம்
சென்னையை ஒட்டியுள்ள 2,3 இடங்களில் சித்தா பல்கலைகழகம் அமைப்பது குறித்து இடங்களை ஆய்வு செய்து கொண்டு வருகிறோம். இதை எந்த இடத்தில் அமைப்பது? என்பது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும். மத்திய அமைச்சருடனான சந்திப்பின்போது, தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்பது, 10 கோரிக்கைகளில் பிரதான கோரிக்கையாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளா் ராதாகிருஷ்ணனும் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications