வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு.. உங்க கூட்டணி அரசு 'இதை' செய்யனுமே..பாமகவுக்கு அமைச்சர் ரகுபதி பதில்
சென்னை: வன்னியருக்கு 10.5% உள் இடஒதுக்கீடு கிடைக்க தமிழ்நாடு அரசு தடையாக இல்லை; முதலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; மத்தியில் உள்ள பாமகவின் கூட்டணி அரசுதான் முதலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் பின்னரே வன்னியர் இடஒதுக்கீடு கிடைக்கும் என்று தமிழ்நாடு சட்டசபையில் சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு தொடர்பாக பாமக தலைவர் ஜிகே மணி கேள்வி எழுப்பினார். இதற்கு சட்ட அமைச்சர் ரகுபதி அளித்த விரிவான விளக்கம்: உறுப்பினர் ஜி.கே.மணி வன்னியர் சமுதாயத்திற்காக 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்தி இங்கே பேசினார்கள். கடந்த ஆட்சியிலே அந்த 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இரண்டுமே அந்த உள் ஒதுக்கீட்டை இரத்து செய்துவிட்டது.

தேவை சரியான "தரவு": காரணம், சரியான தரவுகளுடைய அடிப்படையிலே கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, பொருளாதாரத்தினுடைய பிரச்சினைகள் இவற்றைப் பற்றிய சரியான தரவுகளோடு கொண்டுவராமல் அதை அவசர கதியிலே நிறைவேற்றிய காரணத்தினாலேதான், அது இன்றைக்கு உயர்நீதிமன்றத்தாலும், உச்சநீதிமன்றத்தாலும் இரத்து செய்யப்பட்டிருக்கிறது. எனவே, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு போன்ற தரவுகள் இன்றைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
நீதிபதி பாரதிதாசன் ஆணையம்: அதற்காக நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இன்றைக்கு இந்தப் பரிந்துரைகளை எல்லாம் ஆராய்ந்து அறிக்கை அளித்திட நம்முடைய ஓய்வுபெற்ற நீதியரசர் பாரதிதாசன் அவர்களுடைய தலைமையில் இயங்குகின்ற பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு கூடுதல் Terms of Reference அது அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலே இந்த ஆணையம் விரைவான ஆய்வுகளைத் தர வேண்டுமென்பதற்காக கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளுக்கான தரவுகளை இன்றைக்கு அரசாங்கம் திரட்டி தந்திருக்கிறது.
சாதி வாரி கணக்கெடுப்பு.. சட்ட சபையில் காரசார விவாதம்.. வெளிநடப்புக்கு பின் ஜிகே மணி பரபர பேட்டி
ஜாதிவாரி கணக்கெடுப்பு: ஆனால், சமூகம், பொருளாதார மேம்பாடு போன்ற தரவுகள் திரட்டித் தரப்பட வேண்டுமென்று சொன்னால் அங்கே மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுத்தாக வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தாக வேண்டும். இதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய அரசுக்கு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை 2001-க்குப் பிறகு நடத்தப்படவில்லை. எனவே, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நீங்கள் நடத்துங்கள் என்கின்ற கோரிக்கையை வைத்திருக்கின்றார்கள்.
மக்கள் தொகை, ஜாதிவாரி கணக்கெடுப்பு: மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன், ஜாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்தினால்தான், சமூக பொருளாதார மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பை அரசு திரட்டித் தந்தாலும், அந்த சமுதாயத்தின் பொருளாதார மேம்பாடு மற்றும் அவர்களின் பொருளாதாரம் பற்றிய தரவுகள் இவற்றை நாம் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மூலமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மூலமாகத்தான் கொண்டுவர முடியும்.
நீங்களும் வலியுறுத்துங்களேன்..: எனவேதான் நாங்கள் இதை வலியுறுத்திக்கொண்டுவருகிறோம். இன்றைக்கு நீங்களும் மத்திய அரசின் கூட்டணியில் இருக்கின்றீர்கள். எங்கள் கோரிக்கையை நீங்களும் வலியுறுத்தி, மிக விரைவிலேயே ஜாதிவாரிக் கணக்கெடுப்பினை நடத்த வைத்து, அதன் பிறகு இந்த இட ஒதுக்கீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த அரசு அதற்கு எந்தவகையிலும் தடையாக இல்லை.
பீகார் நிலைமை என்ன?: முதலமைச்சர் குறிப்பிட்டதைப் போன்று, பீகார் மாநிலத்தில் இவ்வாறு ஜாதி வாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அது உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. எனவே, அதை மீண்டும் நாம் செய்தாலும், மீண்டும் உயர் நீதிமன்றத்தால் ரத்துதான் செய்யப்படும். அவ்வாறு ரத்து செய்யப்படுவதில் உங்களுக்கு என்ன நன்மை இருக்கிறது?
இதுதான் தீர்வு: எனவே மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இதனை மேற்கொண்டால், யாருக்கும் எந்தவிதமான பாதகமும் ஏற்படாது. பெயரளவில் கொண்டுவருவதில் என்ன நன்மை இருக்கிறது? உண்மையிலேயே அது கிடைக்க வேண்டுமென்கின்ற உணர்வோடு கொண்டுவரவேண்டுமானால், மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்திதான் கொண்டுவர முடியும். ஏனென்றால், நீதிமன்றத் தீர்ப்புகள் அப்படித்தான் இருக்கின்றன. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அவ்வாறுதான் வழங்கியிருக்கின்றன. இதனை பீகார் மாநிலம் செய்தபோது, அந்த உயர் நீதிமன்றம் அதனை ரத்துசெய்துவிட்டது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications