தீபாவளி ஸ்வீட் டெண்டர்: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன அண்ணாமலை! அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஆவின் நிறுவனத்திடம் இனிப்புகளை கொள்முதல் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இனிப்புகள் கொள்முதல் செய்வதில் எந்த தவறும் நடக்க அனுமதிக்கமாட்டோம் என்று போக்குவரத்துக் கழக அமைச்சர் ராஜகணப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
தீபாவளி கொள்முதலில் சிறிய நிறுவனங்கள் ஆங்காங்கே உள்ள போக்குவரத்து கழகங்களில் ஆர்டரைப்பெற்று சப்ளை செய்து வந்தன. இவை அனைத்தும் லட்சக்கணக்கான ரூபாய் ஆர்டர்களே. ஆனால் திடீரென இந்த டெண்டர்களில் பங்குபெற குறைந்தப்பட்சம் ஆண்டுக்கு ரூ.100 கோடி டர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே பங்குபெற வேண்டும் என விதி திருத்தப்பட்டது.
இதனால் சிறிய நிறுவனங்கள் பங்கேற்பது இயலாமல் போவதும், மிகப்பெரிய ஒரே நிறுவனம் மட்டுமே பங்குபெற வாய்ப்பு உருவாக்கப்படுகிறது என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது, இதன்மூலம் மிகப்பெரும் பர்சன்டேஜ் கமிஷனாக பெறப்படும் வாய்ப்புள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மறுபுறம் அரசின் ஆவின் நிறுவனம் இருக்கும்போது அங்கு கொள்முதல் செய்யாமல் தனியாரை நோக்கி ஏன் புதிய திமுக அரசும் செல்லவேண்டும் என்கிற வாதமும் வைக்கப்பட்டு முதல்வர் தலையிட வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இந்த வாரம் யாரு எலிமினேஷன்.. நேற்றே க்ளூ கொடுத்த ஆண்டவர்?.. ரசிகர்கள் ஹேப்பி!
அண்ணாமலை விமர்சனம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றிலும் தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஸ்வீட் கொடுப்பதற்கு ரூபாய் 100 கோடிக்கு டர்ன் ஓவர் செய்கின்ற கம்பெனிகளில்தான் ஸ்வீட் வாங்குவேன் என்று அமைச்சர் ராஜகணப்பன் சொல்ல காரணம் கரப்ஷனா, பல்க் கமிஷனா என்பதை முதல்வர் பார்க்க வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்திலும் விமர்சித்திருந்தார் அண்ணாமலை.
ஸ்டாலின் அதிரடி உத்தரவு
சமூக வலைதளங்களிலும் தமிழக அரசின் டெண்டர் திருத்த விவகாரம் விவாதப் பொருளானது. தமிழக அரசின் ஆவின் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யாமல் ரூ100 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களிடம்தான் இனிப்புகள் வாங்குவேன் என அடம்பிடிப்பது ஏன் என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து தனியார் நிறுவனங்களிடம் இனிப்புகளை கொள்முதல் செய்யக் கூடாது; ஆவின் நிறுவனத்திடம்தான் இனிப்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டார்.
அண்ணாமலை வரவேற்பு
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த உத்தரவை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று வரவேற்றுள்ளார். இதனிடையே ஸ்வீட் டெண்டர் விவகாரம் குறித்து அமைச்சர் ராஜகணப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
ராஜகண்ணப்பன் விளக்கம்
இது தொடர்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறுகையில், அடையாறு ஆனந்த பவன் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் கேட்டுள்ளனர். இதில் முறைகேடு நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. கடந்த கால அதிமுக அரசு 1 கிலோ இனிப்புகளை ரூபாய் 262-க்கு வாங்கினர். ஆவினில் இந்த இனிப்புகளை ரூ230 முதல் ரூ240க்கு வாங்கலாம். இந்த இனிப்புகள் கொள்முதலில் எந்தத் தவறுகளும் நடக்க வேண்டாம் எனில் ஆவினில் வாங்கிட்டு போகிறோம். இதில் தவறுகள் நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். முதல்வரும் அனுமதிக்கமாட்டார் என்றார்.