சொந்தஊருக்கு செல்லும் மக்கள்.. ஆம்னி பஸ்களில் அதிககட்டணம் வசூலித்தால் நடவடிக்கை..அமைச்சர் எச்சரிக்கை
சென்னை: திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு வருவதால் சென்னையில் இருந்து மக்கள் பேருந்துகளில் தென் மாவட்டங்களுக்கு பயணித்தனர். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகம் எடுத்ததால் முதலில் 14 நாட்கள் தளர்வுகளுன் கூடிய முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் முழு ஊரடங்கை கண்காணிக்க.. மாவட்டம் வாரியாக அமைச்சர்கள் நியமனம்!
ஆனால் மக்கள் இந்த உரடங்கை மதிக்காமல் தேவையில்லாமல் வெளியே சுற்றி வந்தனர். இதனால் வைரஸ் வேகம் அதிகரித்து வந்தது.
முழு ஊரடங்கு
இந்த நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு வரும் மே 24ஆம் தேதி முதல் ஒரு வாரம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் விநியோகம் உள்ளிட்ட மிக அத்திவாசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள் இயங்கவும்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
4,500 பேருந்துகள்
முழு ஊரடங்கு வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழகத்தில் இன்றும், நாளையும் 4500 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த்தது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 1,500 பேருந்துகளும், மற்ற மாவட்டங்களில் 3,000 பேருந்துகளும் இயக்கப்படும் என்று கூறப்பட்டது. இது தவிர ஆம்னி பேருந்துகளும், இன்றும் நாளையும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மக்கள் பயணம்
தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து சென்னையில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில் போன்ற தொலைதூர மாவட்டங்களுக்கும், அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆம்னி பேருந்துகளும் இயங்கின. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு, மற்ற இடங்களுக்கு மக்கள் பயணித்தனர்.
அமைச்சர் எச்சரிக்கை
இந்த நிலையில் தமிழக போக்குரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேருந்துகள் ஒழுங்காக இயக்கப்படுகிறதா? என்பது குறித்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பயணம் செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ' பயணிகளின் தேவைகேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்ச்ரித்தார்.