டெல்லிக்கு நாளை துரைமுருகனுடன் செல்லும் எம்பிக்கள் டீம்.. மத்திய அமைச்சரை சந்தித்து முக்கிய கோரிக்கை
சென்னை: தமிழ்நாடு அனைத்துக்கட்சி எம்.பிக்கள் குழு நாளை டெல்லியில் மத்திய ஜல்சக்தி அமைச்சரை சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக கோரிக்கை வைக்கவுள்ளது. நாளை மாலை இந்த சந்திப்பு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு முரண்டு பிடித்து வருகிறது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தினசரி தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீர் திறக்க பரிந்துரை செய்தும், அந்தப் பரிந்துரையை புறம்தள்ளியது கர்நாடகா. கர்நாடகாவில் மழைப் பொழிவு குறைவாக இருப்பதால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரும் சூழலில் நாங்கள் இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறிவிட்டார். மேலும், மத்திய ஜல்சக்தி அமைச்சரிடமும் கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க முடியாது என தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காவிரி நீர் அளிக்காததற்கு உண்மைக்கு புறம்பான பல காரணங்களை மத்திய ஜல் சக்தி அமைச்சரிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பது ஏற்கதக்கதல்ல எனவும், தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக விடுவித்திட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி, மத்திய ஜல் சக்தி அமைச்சரிடம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளிப்பார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமற்றது என்றும், தமிழ்நாடு தனது ஆயக்கட்டை அதிகப்படுத்தி உள்ளது என்றும் ஆதாரமற்ற அறிக்கைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், கர்நாடக அரசு மத்திய ஜல் சக்தி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டுக்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் போதுமான மழை கிடைக்கும் எனவும், காவிரி டெல்டாவில் தேவையான அளவு நிலத்தடிநீர் இருக்கிறது எனவும் தவறான கருத்துகளை தெரிவித்துள்ளார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகா அரசின் உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை மத்திய அரசு கருத்தில் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி ஒரு கோரிக்கை மனுவை (Memorandum), மத்திய ஜல்சக்தி அமைச்சரிடம் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளிக்க உள்ளார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு அனைத்துக்கட்சி எம்.பிக்கள் குழு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் நாளை டெல்லி பயணிக்க உள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்தித்து, தமிழ்நாடு எம்.பிக்கள் குழுவினர் கோரிக்கை மனு அளித்து, முதல்வர் ஸ்டாலினின் கருத்துகளை எடுத்துரைக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications