தெலுங்கை வளர்ப்பதாக புகார்..அரசு பேருந்துகளில் ’தமிழ்நாடு’ எங்கே? ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் அதிரடி கைது
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நேற்று நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளில், அனுமதியின்றி 'தமிழ்நாடு' என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டியதாக முக்குலத்தோர் எழுச்சி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழக அரசு பேருந்துகளில் மாநிலத்தின் பெயர் இடம்பெறாதது தொடர்பான விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசு பேருந்துகளில் அந்தந்த மாநிலங்களின் பெயர்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், ஆனால் தமிழக அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' என்ற பெயர் இடம்பெறவில்லை என்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
குறிப்பாக, கர்நாடகாவில் செயல்பட்டு வரும் தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர், இந்த விவகாரத்தை சமீபத்தில் முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற தமிழக அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' என்ற ஸ்டிக்கரை ஒட்டி, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தமிழ்நாடு பெயர் சர்ச்சை
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' என்ற பெயரை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினரிடமிருந்து எழுந்தது. சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் பரவலாக பேசப்பட்டது. சில அமைப்புகள் இதை தமிழர் அடையாளம் மற்றும் மொழி தொடர்பான விஷயமாக எடுத்துக் கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளன.
மதுரை மாட்டுத்தாவணி சம்பவம்
இந்த சூழலில் தான், முக்குலத்தோர் எழுச்சி கழகத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நேற்று கூடினர். அங்கிருந்து வெளியேறும் அரசு பேருந்துகளில், அனுமதியின்றி 'தமிழ்நாடு' என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கர்களை அவர்கள் ஒட்டினர். அப்போது, தமிழக அரசு தெலுங்கு மொழியை வளர்ப்பதாகவும், தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி கோஷங்களை எழுப்பினர். இதனால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
'தமிழ்நாடு' ஸ்டிக்கர்
இந்த தகவல் கிடைத்ததும், மாட்டுத்தாவணி போலீசார் உடனடியாக அங்கு சென்று தலையிட்டனர். அரசு பேருந்துகளில் எந்தவிதமான ஸ்டிக்கர்களையும் அனுமதியின்றி ஒட்டக் கூடாது என்றும், இது சட்டவிரோத செயல் என்றும் போலீசார் எச்சரித்தனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் ஒட்டியிருந்த 'தமிழ்நாடு' ஸ்டிக்கர்களை போலீசார் அகற்றி பறிமுதல் செய்தனர். இதனால், முக்குலத்தோர் எழுச்சி கழக நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
முக்குலத்தோர் எழுச்சி கழகம்
தாங்கள் பொதுநலனுக்காகவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர்கள் வாதிட்டனர். ஆனால், சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு போலீசாருக்கு இருப்பதால், அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் எந்தவிதமான செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது என போலீசார் விளக்கினர். இதையடுத்து, அனுமதியின்றி அரசு சொத்துகளில் மாற்றம் செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முக்குலத்தோர் எழுச்சி கழக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
சமூக வலைதள விவாதம்
அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' என்ற பெயரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் சமுக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications