ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறக்கிறார்கள்.. காப்பாற்றுங்கள் முதல்வரே.. எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!
சென்னை: கொரோனா தொற்றில் இருந்து மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தினசரி பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு எச்சரிக்கை மணி
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 30,621 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனாவுக்கு 297 பேர் உயிரிழந்து அச்சத்தை உருவாக்கி இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு கோவையில் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை மணி அடித்து விட்டது.
நிலைமை விபரீதம்
கொரோனா முதல் அலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 30% பேருக்குத்தான் ஆக்சிஜன் கூடிய சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 70% பேருக்கு ஆக்சிஜன் கூடிய சிகிச்சை தேவைப்படுகிறது. அந்த அளவுக்கு நிலைமை விபரீதமாக உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மிகுந்த மனவேதனை
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளிலும்,தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் வசதிகள் இன்றி பல்லாயிரக்கணக்கில் கொரோனா பாதித்த மக்கள் அல்லல்படுவதையும், படுக்கை வசதியின்றி தவிப்பதையும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழப்பதையும் அறிந்து ஆற்றொனாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைகிறேன்.
|
உயிர்களை பாதுகாக்க வேண்டும்
மக்களை காக்கின்ற பெரும் பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருப்பதால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்களின் விலைமதிப்பில்லா இன்னுயிரை பாதுகாத்திடும் வகையில், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும், போதிய ஆக்சிஜன் கிடைக்கவும், தடுப்பு மருந்துகள் கிடைக்கவும், போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.