கண்ணை கட்ட வைத்த கரண்ட் பில்.. மார்ச் மாதம் ரூ.9440, மே மாதம் ரூ.19112.. ஆடிப்போன மக்கள்
சென்னை: கடந்த இரண்டு மாதத்தில் மின்சார பயன்பாடு மிகப்பெரிய அளவில் உச்சம் பெற்றது. பல வீடுகளில் ஏசியை ஆப் செய்யவே இல்லை. குருநாதா தாங்க முடியல என்பது போல் வெயில் சுட்டெரித்தது. இதனால் பலருக்கும் மின் கட்டணம் வழக்கத்தைவிட மிகமிக அதிகமாக வந்துள்ளது. இதனால் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
மின்சாரம் தொட்டால் மட்டும் ஷாக் அடிக்கும் விஷயமல்ல.. அதன் பில்லும் ஷாக் அடிக்கும் வகை தான். தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதங்களாக வெயில் மிக கடுமையாக இருந்தது. பகலில் வெயிலும், இரவில் அனல் காற்றும் வீசி மக்களை நிலைகுலைய வைத்தது. வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் மக்கள் பலர் மின்விசிறியின் கீழ் தான் உட்கார வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். பகலில் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.

இதனால் இரவில் மட்டுமே ஏசி போட்டு வந்த பலர்,பகலிலும் ஏசி போட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். சென்னை போன்ற பெருநகரங்களில் வழக்கத்தைவிட வெயில் சுட்டெரித்த காரணத்தால், எப்படியாவது ஏசி வாங்கி வீட்டில் பொறுத்திவிட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள்.
இதனால் ஏசி கடைகளில் மிகப்பெரிய அளவில் கூட்டம் களை கட்டியது. சென்னையை பொறுத்தவரை பெரும்பாலான வீடுகளில் ஏசி இருக்கிறது. கடந்த ஆண்டு வரை ஏசி வாங்காதவர்கள் இந்த முறை வாங்கிவிட்டார்கள். அதாவது ஏசி இயந்திரத்தை ஓடி சென்று வாங்க வைத்தது வானிலை மாற்றம்.
ஏசி இல்லாமல் வாழவே முடியாது என்கிற அளவிற்கு சென்னை போன்ற பெருநகர மக்கள் காலநிலை மாற்றத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் அதன் விளைவாக மின் கட்டணம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மின் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்ட காரணத்தால், கடந்த கோடையை விட இந்த கோடையில் மின் கட்டணம் இருமடங்காக உயர்ந்துள்ளது. சிலருக்கு ஆயிரம் ரூபாய் வந்த இடத்தில் இந்த முறை 3000 முதல் 4000 ரூபாய் வரை வந்துள்ளது. 10000 வந்தவர்களுக்கு 20000 ரூபாய் வரை வந்துள்ளது. இது தொடர்பான பதிவு ஒன்று சமூக ஊடகத்தில் வெளியாகி உள்ளது.
அதில் சித்து என்பவர் வெளியிட்ட மின்சார பில்லில், இந்த மே மாதம் பில் பாருங்க என்று முதல்வரையும் விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில் மார்ச் மாதம் மின் கட்டணம் ரூ.9440 ஆக இருக்கிறது. ஆனால் மே மாதம் இந்த கட்டணம் ரூ.19112 உயர்ந்துள்ளது. இந்த பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. அவரது மின் இணைப்பு எண்ணை அளிக்குமாறும், அப்படி மின் இணைப்பு எண்ணை தெரிவித்தால் விசாரிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. சித்துவின் பதிவிற்கு கீழ் பலரும் மின் கட்டணம் அதிக அளவில் வந்துள்ளதாக மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர். அதில் ஒருவருக்கு 342 ரூபாய் மார்ச் மாதம் வந்திருந்த நிலையில், இப்போது அவருக்கு 1683 ரூபாய் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications