வேலை வாங்கி தருவதாக மோசடி: ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள்.. ஹைகோர்ட்டில் போலீஸ் தரப்பு பதில்
சென்னை: வேலை வாங்கித் தருவது தொடர்பான மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தங்களுக்கு எதிராக புகார் அளித்தவர்கள் மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுக்கள் மீது நீதிபதி நிர்மல்குமார் முன்பு இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய் நல்லதம்பி என்பவர் தான் குற்றவாளி என்றும் ,அவரை காவல்துறை பாதுகாக்கிறது என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இதில் தொடர்பில்லை, விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என்று வாதிட்டார்.
காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான புகாரில் இருபத்திமூன்று சாட்சிகளிடம் விசாரிக்க பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு,அவரது உதவியாளர் பலராமன் என்பவர் மூலம் தான் இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!
மேலும் நல்ல தம்பியும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி முன் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.