கேரளாவுக்கு வழிகாட்டியது தமிழகம்தான்..... 2006-ல் 24 வயது ரேகா பிரியதர்ஷிணியை சேலம் மேயராக்கிய திமுக
சென்னை: கேரளாவில் 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்னரே 2006-ம் ஆண்டில் தமிழகத்தில் சேலம் மாநகராட்சியின் பெண் மேயராக 24 வயது ரேகா பிரியதர்ஷிணியை திமுக தேர்வு செய்து இந்தியாவுக்கே வழிகாட்டியது.
கேரளாவில் அண்மையில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டன. திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் இடதுமுன்னணி கைப்பற்றியது.
திருவனந்தபுரம் மேயர்
இடது முன்னணியின் சார்பாக மேயராக 21 வயது இளம் பெண் ஆர்யா ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். எலக்ட்ரீசியன் வேலை பார்க்கிறார் ஆர்யாவின் தந்தை ராஜேந்திரன். அவரது அம்மா எல்.ஐ.சி. முகவர்.
திமுக ரேகா பிரியதர்ஷிணி
இளம் வயதில் ஆர்யா ராஜேந்திரன் மேயராக தேர்வு செய்யப்பட்டதை இடதுசாரிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே 2006-ம் ஆண்டில் 24 வயது ரேகா பிரியதர்ஷிணியை திமுக சேலம் மாநகராட்சி மேயராக்கியது; அதுவும் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளம் வயது பட்டதாரியை நாட்டிலேயே முதன் முதலில் மேயராக்கியது திமுகதான் என அக்கட்சியினரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சேலம் மேயராக ரேகா பிரியதர்ஷிணி
2006-ம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்த கையோடு சேலம் மேயராக தேர்வு செய்யப்பட்டார் ரேகா பிரியதர்ஷிணி. 2016 சட்டசபை தேர்தலில் கங்கவள்ளி தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் ரேகா பிரியதர்ஷிணி.
ரேகா பிரியதர்ஷிணி கருத்து
இது தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த ரேகா பிரியதர்ஷிணி, இளம் வயதில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் வாழ்த்துக்கள் சகோதரி..24 வயதில் எனக்கு வாய்ப்பு வழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர், ஆருயிர் தலைவர் தளபதியார், சேலத்து சிங்கம் தலைவர் வீரபாண்டியார் அவர்களை வணங்குகின்றேன்.... என பதிவிட்டுள்ளார்.