தமிழகம்- மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- இன்று 195 பேருக்கு தொற்று உறுதி- உயிரிழப்பு இல்லை!
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேநேரத்தில் தமிழகத்தில் இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.
நாட்டில் பொதுவாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்தது. கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மிதமான வேகத்தில் கொரோனா! தினமும் இருமுறை விசாரிக்கும் முதல்வர்! ராதாகிருஷ்ணன் கூறிய தகவல்!
இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள்
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 28,857; கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.07 சதவிகிதமாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.72 சதவீதம் ஆகும். இன்று காலையுடனான 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,345 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,26,36,710 என அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு
அதேநேரத்தில் இன்று காலையுடனான 24 மணி நேரத்தில் 5,233 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 1.67 சதவீதம் ஆகும். வாராந்திர பாதிப்பு விகிதம் 1.12 சதவீதம் ஆகும். இதுவரை மொத்தம் 85.35 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 3,13,361 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று 195 பேருக்கு பாதிப்பு
இந்த நிலையில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வழக்கமான அறிக்கையை மாலை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று 144 ஆக இருந்தது; இன்று 13,728 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 927-ல் இருந்து 1021 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு இல்லை
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 34,56,512 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 6,55,53,236 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் இன்று 101 பேர் வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,17,466 ஆகும். தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 38,025. தமிழக மாவட்டங்களில் சென்னையில் அதிக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 95 பேருக்கு கொரோனா உறுதியானது. செங்கல்பட்டில் 23 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 30 பேருக்கும் கோவையில் 10 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.