1 முதல் 12 வகுப்பு வரை.. ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருந்த சூழலில், வெயிலின் தாக்கம் காரணமாக பெற்றோர், ஆசிரியர்கள் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்படும் தேதியை பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் வரும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வகுப்புகள் வாரியாக வெவ்வேறு தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது கல்வித்துறை அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கத்திரி வெயில் மற்றும் வெப்ப அலையின் தாக்கம் மே இறுதி வரை நீடிக்கும் என்பதால், மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என்று அனைவருக்கும் ஜூன் 4ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
முன்னதாக 4 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்க ஆலோசிக்கப்பட்டு வந்தது. ஆனால் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பள்ளி திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷும் கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து அமைச்சர் ராஜ்மோகன் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை பெற்று முடிவு எடுக்கப்படும் என்?று தெரிவித்திருந்தார். பின்னர் முதல்வர் விஜய்யுடன் அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை நடத்தியதன் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சில முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகளை முழுமையாகத் தூய்மைப்படுத்தி, கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். கடுமையான வெயில் நிலவுவதால், மாணவர்களுக்குத் தடையின்றி பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதையும், வகுப்பறைகளில் மின்விசிறிகள் சரியாக இயங்குவதையும் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications