எனது உடல்நலனை விட மக்கள் நலன் முக்கியம்! உடல் சோர்வுடன் சட்டசபையில் மெல்லிய குரலில் பேசிய ஸ்டாலின்!
சென்னை: எனது உடல்நலனை விட மக்கள் நலனும், தமிழ்நாட்டின் நலனும் முக்கியம் என்பதால் தான் காய்ச்சல், தொண்டை வலியால் ஏற்பட்ட உடல் சோர்வை கூட பொருட்படுத்தாமல் சட்டசபை சிறப்பு கூட்டத் தொடரில் பங்கேற்றிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை என சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய ஸ்டாலின், காய்ச்சல், தொண்டை வலியால் வீட்டில் ஓய்வில் இருந்து வந்த தாம், தன் உடல்நலனை விட மக்கள் நலன் முக்கியம் என்பதால் சட்டசபை சிறப்புக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ளதாக மிகவும் மெல்லிய குரலில் பேசினார். இதன் மூலம் இன்னும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொண்டை வலி சரியாகவில்லை என்பதும் காய்ச்சலால் ஏற்பட்ட உடல் சோர்வு இன்னும் நீங்கவில்லை என்பதும் தெரிய வருகிறது.

கோடிக்கணக்கான மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் இயற்றும் சட்டத்தை தடுக்கும் சக்திகள் இருக்குமானால் அது இந்திய ஜனநாயகத்தை மோசமாக கொண்டு செலுத்திவிடும் என்ற அச்சம் உள்ளதாக கூறிய முதல்வர் ஸ்டாலின் சமூக நலத் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் இந்திய ஒன்றியத்திற்கே தமிழ்நாடு முன் மாதிரியாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். கருணாநிதி வழியில் தான் ஆட்சி நடத்துகிறோம் என்றும் அரசு இயற்றும் சட்டத்தை தடுக்க முற்பட்டால் பாரதிதாசன் சொன்னபடி தங்களுக்கு தடந்தோள்களும் உள்ளது என எச்சரித்தார்.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் இந்தியாவையே வழிநடத்தும் திட்டங்களாக உள்ளன என பெருமிதம் தெரிவித்து பேசினார் முதல்வர் ஸ்டாலின். நிதி நெருக்கடி, ஒன்றிய அரசின் இடையூறுகள் இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாக பல திட்டங்களை தமிழக அரசால் நிறைவேற்ற முடியும் என்றார். ஜனநாயகத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இன்றைய தினம் சட்டசபை சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டியுள்ளதாக அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications