SSLC Result: தமிழக 10 ஆம் வகுப்பு ரிசல்டில் 94.31% மாணவர்கள் பாஸ்.. முதலிடம் பிடித்து புதுக்கோட்டை மாஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. பொதுத்தேர்வில் மொத்தமாக 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சி பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்டம் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் மொத்தமாக 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த பொதுத்தேர்வை சுமார் 8.82 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதையடுத்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி www.tnresults.nic.in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் அவர்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், பள்ளி மாணவர்கள் தாங்கள் பள்ளியில் வழங்கியிருந்த கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. தனித்தேர்வர்களுக்கும் ஆன்லைனில் விண்ணப்பித்தபோது வழங்கியிருந்த மொபைல் எண்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மாவட்ட வாரியான தேர்ச்சி பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் 97.54 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், தஞ்சாவூர் 97.41 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. மேலும் திருச்சி 97.31 சதவீதமும், கன்னியாகுமரி 97.30 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களின் கடின உழைப்புக்கும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஆதரவுக்கும் இந்த தேர்வு முடிவுகள் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றன. தமிழகத்தில் கல்வித்தர உயர்வை இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மீண்டும் உறுதி செய்துள்ளன.












Click it and Unblock the Notifications