வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்! அச்சப்பட வேண்டாம்.. சென்னை ஹைகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
சென்னை: "சார்" எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நாளை தொடங்க உள்ளது. சார் பணிகளுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் சூழலில், எஸ்.ஐ.ஆர் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி 2 கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக இந்த பணி நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்க உள்ளது. தமிழகத்தில், இந்தப் பணியை மேற்கொள்வதற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வழக்கு தொடருவோம் என தீர்மானம்
இதுதொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கார்ட் ஹோட்டலில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. திமுக உள்ளிட்ட 49 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை நிறுத்தாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தல் ஆணையம் விளக்கம்
இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வஸ்த்வா தலைமையிலான அமர்வில் எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான நிரஞ்சன் ராஜகோபால், "ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பாகவும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெறும். தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த மாதம் விரிவான அறிவிப்பினை வெளியிட்டது. நாளை முதல் இந்தப் பணிகள் தொடங்க உள்ளன.
டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி
இந்தப் பணிகள் முழுமையாக வாக்காளர் பட்டியல் மாற்றியமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்காளருக்கும் படிவங்கள் வழங்கப்பட்டு வாக்காளர் சரிபார்க்கப்பட்டு பூர்த்தி செய்த படிவங்களை சரிபார்த்து டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அப்போது அந்தப் பட்டியலில் ஆட்சேபனைகள் எதுவும் இருந்தால் அதைத் தெரிவிக்கலாம் எனவும் பிப்ரவரி மாதம்தான் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும், அதுவரை கால அவகாசம் உள்ளது. யாரும் கவலைப்பட வேண்டியதில்லை," என்று வாதிட்டார்.
அச்சப்பட தேவையில்லை
1959 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 முறை இந்தப் பணிகள் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கடைசியாக 2005 ஆம் ஆண்டு நடைபெற்றது எனவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம் எஸ்.ஐ.ஆர் குறித்து அச்சப்பட தேவையில்லை என்பதை தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக தனது வாதத்தில் கூறியுள்ளது.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ சத்யா உள்ளிட்டோர், சென்னை தி.நகர், தாம்பரம் ஆகிய தொகுதிகளில் இறந்தவர்களின் பெயர், இரட்டை பதிவுகளை நீக்க கோரி மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போதுதான் தேர்தல் ஆணையம் மேற்கண்ட வாதத்தினை முன்வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications