இந்து மதம் எங்களுக்கு சொந்தம் - பாஜக பாதையில் வாக்கு அறுவடை அரசியலை கையில் எடுக்கிறதா காங்கிரஸ்?
சென்னை: இந்து, இந்துத்துவா, இந்துமதம் என்பதெல்லாம் ஒட்டுமொத்தமாக தங்களுக்கே உரியது என பாஜக அரசியல் செய்வதால்தான் தங்களது எதிர்கால இருப்பே கேள்விக்குறியாகிறது என நினைக்கிறது காங்கிரஸ். இதனால்தான் இப்போது இந்து மதம் காங்கிரஸுக்கும் சொந்தம் என்றெல்லாம் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியிருக்கிறார் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
நாடு விடுதலை முன்னர் இருந்தே தீவிர இந்துத்துவா, இந்து ராஷ்டிரா பேசுகிற சக்தியாக ஆர்.எஸ்.எஸ்., அதன் பரிவாரங்கள் இயங்கின. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அங்கிட்டும் இங்கிட்டுமாக அலைபாயவும் செய்தனர். தீவிர இந்துத்துவா கோட்பாடு பேசுகிற இயக்கங்களில் மாஜி காங்கிரஸ் தலைவர்களே கோலோச்சவும் செய்தனர்.

காங். மதச்சார்பின்மை
நாடு விடுதலைக்குப் பின்னரும் கூட காங்கிரஸ் கட்சியானது தீவிர இந்துத்துவா போக்கைப் பின்பற்றாவிட்டாலும் மென்மைப்போக்கை கையாண்டது. மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம் என்ற முழக்கத்தை கெட்டியாகவும் பிடித்துக் கொண்டது. காங்கிரஸின் மதச்சார்பின்மை முழக்கமானது பல்வேறு அரசியல் காரணங்களால் தேவைப்பட்ட ஒன்றாகவும் இருந்தது.

பாஜக எழுச்சி
அதனால் இயல்பாகவே தீவிர இந்துத்துவா விவகாரத்தில் மிகப் பெரிய வெற்றிடம் உருவாகி நின்றது. இந்த வெற்றிடத்தை எளிதாகவே ஜனசங்கம், பாஜக தன்வயப்படுத்திக் கொண்டது. 1980களுக்குப் பின்னர் மாநில கட்சிகளின் பேரெழுச்சி, காங்கிரஸ் தலைமையின் தள்ளாட்டம் ஆகியவை வேறுவழியே இல்லாமல் மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டை முழுமையாக இறுகப் பற்ற வேண்டிய கட்டாயத்தை காங்கிரஸுக்கு உருவாக்கியது. இன்னொரு பகக்கம், பாஜகவோ இந்துக்களின் வாக்குகளை மிக அதிதீவிரமாக ஒருமுகப்படுத்தி மத்தியில் ஆட்சி அதிகாரத்தையும் கூட கைப்பற்றியது.

காங். எதிர்காலம்
கடந்த 2 லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இருக்கிறதா? என்கிற கேள்வி உயிர்ப்புடன் இருக்கிறது. ஒரு மாநில கட்சியின் ரேஞ்சுக்குதான் காங்கிரஸ் கட்சியால் இடங்களையும் வாக்குகளைப் பெறக் கூடியதாக இருக்கிறது. இதற்கு பதிலடியாக மென்மை இந்துத்துவா போக்கை கையில் எடுத்து பார்க்கவும் காங்கிரஸ் முயற்சித்து கொண்டிருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் அவ்வப்போது தேர்தல் காலங்களில் நாங்களும் இந்துக்கள் என காங்கிரஸ் முழங்க தயங்குவதில்லை.

மென்மை இந்துத்துவா
அதேபோல் தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆபத்து நெருக்கடி ஏற்படும் நிலையில் நாங்களும் இந்துக்கள் என பேச தயங்குவதில்லை. இந்துத்துவாவின் நேர் எதிரியான திராவிடம் பேசுகிற திமுக கூட அப்படியான பேச்சுகளை முன்வைப்பதும் உண்டு. இப்போது தமிழக காங்கிரஸும் இந்த பல்லவியை தூக்க தொடங்கியிருக்கிறது. இந்து மதம் என்பது காங்கிரஸுக்கும் சொந்தம் என உரிமை கோருகிறது தமிழக காங்கிரஸ். இந்துக்களின் வாக்குகளைத் தக்க வைக்க அல்லது பாஜக பாணியிலான வாக்கு அறுவடை அரசியல் என இதனைப் பார்க்கலாம். அதேநேரத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்துத்துவா- இந்து என்கிற வட இந்திய பாணி அரசியல் ஒருபோதும் தேசிய கட்சிகளுக்கு கை கொடுக்கவே கொடுக்காது என்கிற யதார்த்தத்தையும் புரிந்து கொள்ளுதல் அவசியம் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications