தனியார் மருத்துவமனைகளில் ஈவு இரக்கமின்றி வசூல் வேட்டை... அரசால் தடுக்க முடியவில்லை -தமிழக காங்கிரஸ்
சென்னை: கொரோனா சிகிச்சை கட்டணம் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களால் நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகளில் பகல் கொள்ளை நடைபெறுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி பரபரப்பு புகார் கூறியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளின் வசூல் வேட்டையை தமிழக அரசால் தடுக்க முடியவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நிலைமை தலைகீழ்
கொரோனா சிகிச்சை அளிக்க என்றைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி கொடுத்தார்களோ, அன்றைய தினத்திலிருந்து நிலைமை தலைகீழாகிவிட்டது. முதல்வரின் மருத்துவக் காப்பீடு இருந்தால் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும், மற்றவர்களுக்கு ரூபாய் 9 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த தொகைக்கு கூடுதலாக தனியார் மருத்துவமனைகள் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்திருந்தார்.

நடவடிக்கை இல்லை
முதலமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்த பின்பும், தனியார் மருத்துவமனைகளில் கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக கொரோனா நோயாளிகள் தினந்தோறும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

லாப நோக்கத்தோடு
கார்பரேட் நிறுவனங்களால் முதலீட்டின் அடிப்படையில் லாப நோக்கத்தோடு சேவை மனப்பான்மையின்றி தொழிலாக நடத்தப்படுவதால் மருத்துவமனை கட்டணங்கள் என்ற பெயரில் கடுமையாக வசூலிக்கப் படுகிறது. மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை முடிந்த நிலையில் ரூபாய் 6 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை பணம் செலுத்தியிருக்கிறார்கள். இதைவிட ஒரு பகல் கொள்ளை வேறு எதுவும் இருக்க முடியாது.
Recommended Video

அரசு உடந்தை
கொரோனா காலத்திலும் ஈவு இரக்கமின்றி நோயாளிகளிடம் வசூல் வேட்டை நடத்துவதை தமிழக ஆட்சியாளர்களால் தடுக்க முடியவில்லை. இதற்கு என்ன காரணம் என்றால் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறாமல் வசூல் வேட்டை நடத்தும் தனியார் மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு விதித்த கட்டண வரம்பை மீறுகிற தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? தனியார் மருத்துமனைகளின் வசூல் வேட்டைக்கு தமிழக அரசே உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்ட விரும்புகிறேன்.












Click it and Unblock the Notifications