நாளை மறுநாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம்.. தேதியை அறிவித்த செல்வப்பெருந்தகை
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்பட பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சென்னை தேனாம்பேட்டையில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் திடீரென இந்த கூட்டமானது ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் டெல்லி உயர்நிலைக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டிருந்தனர். இதனால் இந்த செயற்குழு கூட்டமானது தேதி குறிப்பிடபடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தின் போது சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனவும் சட்டமன்ற தேர்தல் ஆயத்த பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் மத்திய மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள், மக்கள் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ் ராஜேஷ்குமார், எம்எல்ஏ, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்என் ஹெக்டே, நிவேதித் ஆல்வா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என்று நேற்று ராகுல் காந்தி கூறியிருந்தார் என்றும், கூட்டணி பற்றி தலைமையே முடிவு செய்யும் என்றும் செல்வப்பெருந்தகை நேற்று கூறியிருந்தார். இந்த பரபரப்பான சூழலில் நாளை மறுநாள் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications