நீட் விவகாரத்தில்... எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்... கே.எஸ்.அழகிரி சாடல்..!
சென்னை: நீட் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார்.
நீட்டிலிருந்து விலக்கு கோரி மத்திய பாஜக அரசிடம் அதிமுக நினைத்திருந்தால் நிபந்தனைகள் விதித்திருக்கலாம் என்றும் ஆனால் முதுகெலும்பில்லாத அரசை நடத்தியதால் அவர்கள் அது போன்று செய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு நாளும் மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்கள் நிறைவேறுகிற வகையில் அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இன்றைக்கு சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறுகிற வகையில் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறார். இதற்காகத் தமிழக முதலமைச்சரை மனதாரப் பாராட்டுகிறேன்.

நீட் தேர்வு
கடந்த காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு, மத்திய பா.ஜ.க. அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அன்றைக்கு மக்களவையில் 38 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களையும் பெற்றிருந்த அ.தி.மு.க. அதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

மக்கள் விரோதம்
மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டத் திருத்தம் போன்ற பா.ஜ.க.வின் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்த போது, நீட் தேர்வுக்கு விலக்கு பெறுகிற வகையில் முன்நிபந்தனைகளை விதித்திருக்கலாம். ஆனால், மடியில் கனம் இருக்கிற காரணத்தினாலே முதுகெலும்பில்லாத அ.தி.மு.க. அரசு பா.ஜ.க. அரசிடம் நிபந்தனை விதிக்க முடியவில்லை. அதற்காக தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களை வஞ்சிக்கிற வகையில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது.
Recommended Video

அதிமுக ஆட்சி
நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத தமிழக மாணவர்கள் அனிதா உள்ளிட்ட 16 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது கூட, சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது. இந்த தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. ஆட்சி தான் பொறுப்பாகும்.

நீலிக்கண்ணீர்
கடந்த சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு கோரும் தீர்மானங்கள் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டதை தமிழக சட்டப் பேரவைக்குத் தெரிவிக்காமல் இரண்டு ஆண்டுகள் மூடி மறைத்தது மிகப்பெரிய மக்கள் விரோதச் செயலாகும். இதன்மூலம் தமிழக சட்டசபையின் உரிமைகளை அவமதித்த குற்றத்தை அ.தி.மு.க. அரசு செய்தது. இதற்காக ஜனநாயகத்தில் எவ்வளவு பெரிய தண்டனையை வேண்டுமானாலும் வழங்கலாம். அத்தகைய படுபாதகச் செயலை செய்தவர்கள் இன்றைக்கு தற்கொலை செய்து கொண்ட மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

சந்தர்ப்பவாதம்
இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென்று கோருகிறார்கள். கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியின் போது அனிதா உள்ளிட்ட 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட போது, குறைந்தபட்சம் இரங்கல் செய்தி கூட வெளியிடாதவர்கள் இப்போது இழப்பீட்டுத் தொகை கேட்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத செயலாகும்.












Click it and Unblock the Notifications