அண்ணாமலைக்கு இது அழகல்ல! எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசக் கூடாது! புத்திமதி கூறும் கே.எஸ்.அழகிரி!
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரை எடுத்தேன் கவிழ்த்தேன் என மிக இயல்பாக பேசி வருவதாகவும் அவரது பேச்சில் இரட்டை வேடம் இருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தோல்வியிலிருந்து பா.ஜ.க. பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை என்றும் இந்தி திணிப்பு தொடர்கதையாக நடந்து வருவதாகவும் அவர் சாடியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள காட்டமான அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கோபம் காட்டிய குருமூர்த்தி..! உறுதியாக நிற்கும் அண்ணாமலை! இந்தி விவகாரத்தில் மீண்டும் வார்த்தை போர்!
துக்ளக் ஆண்டுவிழா
துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்க தமிழகம் வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் இந்தி மொழி திணிப்பு குறித்துப் பேசியிருக்கிறார். இந்தியைப் படிக்காதீர் என்கிற அணுகுமுறையினால் தமிழகம் தனித்துவிடப்பட்டுள்ளதாக கூறியதன் மூலம் தமிழர்களின் உணர்வை அவர் புண்படுத்தியிருக்கிறார். இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலமும் இருக்கும் என்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிராக நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார். நேருவின் உறுதிமொழியால் பெற்ற சட்டப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கிற வகையில் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தி திணிப்பு
ஒரே நாடு, ஒரே மொழி என்ற அடிப்படையில் பா.ஜ.க. செயல்பட விரும்புகிறது. பா.ஜ.க. ஆட்சியைப் பொருத்தவரை இந்தி திணிப்பு தொடர்கதையாக நடந்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் இந்தியைத் திணித்தார்கள். கடுமையாக எதிர்த்த காரணத்தினால் விலக்கிக்கொண்டார்கள். ஏற்கெனவே ரயில்வே, தபால் துறை உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் வடமாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகிறார்கள். இதன்மூலம் தமிழகத்திற்கு விரோதமாக மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது.
காங்கிரஸ் தலைவர்கள்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை காங்கிரஸ் தலைவர்கள் போட்டு கொண்டார்களா? அல்லது வெளிநாட்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டார்களா? என்று நிர்மலா சீதாராமன் விநோதமான ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். கொரோனா தொற்றை எதிர்கொள்ள ஒரே ஒரு தடுப்பூசியைக் கூட மத்திய அரசின் பொதுத்துறை சார்பாக தயாரிக்க வக்கற்ற பா.ஜ.க. அரசு இந்தக் கேள்வியை எழுப்ப எந்த உரிமையும் இல்லை.
முழுப்பூசணிக்காய்
காங்கிரஸ் ஆட்சி செய்த 60 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பொருளாதாரப் பேரழிவு நிகழ்ந்து வருகிறது. உற்பத்தி குறைவு, வேலையிழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. மோடி ஆட்சியில் இந்திய ரூபாயின் மதிப்பு ஐசியூவில் உள்ளது. இதன்மூலம் நிதி அமைச்சர் நிதி மேலாண்மையில் படுதோல்வி அடைந்துள்ளார்.
அண்ணாமலை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை லுலு மால்கள் தொடங்குவதை கடுமையாக எதிர்த்திருக்கிறார். ஆனால் கர்நாடகாவில் லுலு மால் இயங்குவதை மூடிமறைத்து விட்டு தமிழகத்தில் எதிர்ப்பது அவரது இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. ஆதாரமில்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது அவருக்கு இயல்பாக இருக்கிறது. காங்கிரசையும் தி.மு.க.வையும் அழிகிற நிலையில் இருப்பதாகக் கூறுகிறார். தோல்வியிலிருந்து பா.ஜ.க. பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிற, நீட்டை ஆதரிக்கிற பா.ஜ.க.வை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.