நடிகர் விஜய் அற்புதமான கலைஞர்...தமிழக அரசு அரண்டு விட்டது-கே.எஸ்.அழகிரி
சென்னை: நடிகர் விஜய் தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களால் ஈர்க்கப்பட்டு, போற்றப்படுகின்ற அற்புதமான ஒரு இளம் கலைஞர் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பொதுவாக பேசியதை அதிமுகவுக்கு எதிராக பேசியதாக அமைச்சர் ஜெயக்குமார் கற்பனையாக புரிந்துகொண்டுள்ளதாக கூறியுள்ளார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்கிற கதையாக , எதைக் கண்டாலும் அஞ்சும் நிலையில் அதிமுகவினர் உள்ளதாக விமர்சித்துள்ளார்.

நடிகர் விஜயை பொறுத்தவரை அவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர் என்றும், அரசியல் கட்சியை ஆதரித்தவர் அல்ல எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய ஒரே காரணத்திற்காக சாய்ராம் கல்லூரிக்கு உயர்கல்வித்துறை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதைவிட பாசிச நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது என சாடியுள்ளார்.
கல்லூரி நிர்வாகம் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை உயர்கல்வித்துறை மூலம் அதிமுக அரசு ஏவிவிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், உயர்கல்வித்துறைச் செயலாளர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சாய்ராம் கல்லூரிக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை அனுப்பிய நோட்டீசை திரும்பப்பெறவேண்டும் என்றும், இல்லையெனில் தமிழக ஆட்சியாளர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications