"அரைவேக்காடு, திடீர் அரசியல்வாதி.. அண்ணாமலையை கேஎஸ் அழகிரி கடுமையாக விமர்சிக்க என்ன காரணம் தெரியுமா?
சென்னை: தந்தை பெரியாரை எதிர்த்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசினால் 2024 லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் பாஜக டெபாசிட் இழக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். ஶ்ரீரங்கத்தில் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி வரும்பொழுது முதல் வேளையாக அந்த கம்பத்தை அப்புறப்படுத்துவது; நம்முடைய ஆழ்வார்களில் இருந்து நாயன்மார்களில் இருந்து அவர்களுடைய சிலைகள் அங்கே வைக்கப்படும். தமிழ்ப் புலவர்களுடைய சிலைகள் வைக்கப்படும். தமிழ்ப் புலவர் திருவள்ளுவர் சிலை வைக்கப்படும். நம்முடைய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட வீரர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுடைய சிலையை வைப்போம். கடவுளை நம்புகிறவன் முட்டாள் என சொல்லக் கூடிய சிலையை பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலேயே தமிழகத்தில் இருக்கிற அனைத்து கோவில்களிலும் அகற்றிக் காட்டும் என்றார்.

இதற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர். தந்தை பெரியாரை விமர்சித்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.
இதனிடையே தந்தை பெரியார் சிலையை பொது இடத்தில்தான் வைப்போம்; சிலையை உடைக்க மாட்டோம்; அவமரியாதை செய்ய மாட்டோம்; கோவில்கள் முன்பாக இருந்து மட்டும் அகற்றுவோம் எனவும் விளக்கம் தந்தார் அண்ணாமலை.

தந்தை பெரியார் குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், தமிழக அரசியல் வரலாற்றை தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பை வரலாற்று நூல்கள் மூலம் அறிந்து கொண்டு பேசுவது நல்லது. அண்ணாமலையின் இத்தகைய பேச்சுகள் வருகிற 2024 மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவே உதவப் போகின்றன... எனவே, தமிழக மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் அண்ணாமலை ஆளாவதை எவராலும் தடுக்க முடியாது.என எச்சரித்துள்ளார் கே.எஸ்.அழகிரி












Click it and Unblock the Notifications