ரேபிட் டெஸ்ட் கிட் விவகாரம்... மத்திய மாநில அரசுகளுக்கு தமிழக காங்கிரஸ் சரமாரி கேள்விகள்
சென்னை: ரேபிட் டெஸ்ட் கிட் விலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அது தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி.
சோதனைக் கருவிகளையே தரம்பார்த்து வாங்கமுடியாதவர்கள் மக்களை எப்படி காப்பாற்றப் போகிறார்கள் என்ற கவலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே அறிக்கை வாயிலாக மத்திய மாநில அரசுகளுக்கு கே.எஸ்.அழகிரி எழுப்பும் வினாக்கள் பின்வருமாறு;
1. சீன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட துரித சோதனை கருவியின் அடக்கவிலை ரூ. 245. கருவியின் தரத்தை உறுதி செய்து நேரடியாக கொள்முதல் செய்யாமல் வேறொரு விநியோகஸ்தர் மூலம் ரூ. 600 விலைக்கு ஐ.சி.எம்.ஆர். ஏன் கொள்முதல் செய்தது?
2. டெல்லி உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டிய விலை உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு ஏற்பட இருந்த இழப்பீடு ரூ. 17 கோடியே 75 லட்சம். சோதனை கருவியின் விலையை ஐ.சி.எம்.ஆர். முடிவு செய்வதா? நீதிமன்றம் முடிவு செய்வதா? இதுதான் மோடி ஆட்சியின் இலக்கணமா?
3. ராபிட் டெஸ்ட் கருவிகளை ஐ.சி.எம்.ஆர். வாங்கிய ஆர்க் நிறுவனத்திடம் வாங்காமல் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாத விநியோகஸ்தரான ஷான் பையோடெக் மூலம் ஒரு கருவி ரூ. 600 விலைக்கு தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்தது ஏன்?
4. தகுதியான நிறுவனத்திடம் தரமான சோதனை கருவிகளை வாங்கமுடியாத மத்திய, மாநில அரசுகள் கொரோனா நோயிலிருந்து 136 கோடி மக்களை எப்படி காப்பாற்றப்போகிறார்கள்?
5. துரித சோதனை கருவியின் விலை ரூ. 245 ஆக இருக்கும்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ரூ. 600 விலை கொடுத்து வாங்கியது ஏன்?
6. ரூ. 17 கோடியே 75 லட்சம் மத்திய அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பு மத்திய சுகாதாரத்துறையா? ஐ.சி.எம்.ஆரா?
7. 4 லட்சம் கருவிகளை ரூ. 24 கோடிக்கு வாங்க கொள்முதல் ஒப்பந்தம் போட்டதை அமைச்சரால் மறுக்க முடியுமா?
இவ்வளவு கூடுதல் லாபம் ஈட்ட அனுமதித்திருக்கலாமா என்ற கேள்விக்கு மத்திய அரசிடம் பதில் இல்லை. இதைப் பற்றி மத்திய அரசு வாய் திறக்க மறுக்கிறது. இப்படி அமைதியாக இருந்தால், கொள்ளை லாபம் ஈட்டிய நிறுவனங்களுக்கு நீங்கள் ஆதரவு அளித்ததாகவோ அல்லது உதவி செய்ததாகவோ பொருள்படும் என்பதை எவராலும் மறுக்க இயலாது.












Click it and Unblock the Notifications