பிரதமர் மோடி இதைச் செய்திருந்தால்.. ஜெயலலிதா உயிருடன் இருந்திருப்பார்.. தமிழக காங்கிரஸ் ஆதங்கம்!
சென்னை: எம்.ஜி.ஆருக்கு மருத்துவ வசதியுடன் கூடிய சிறப்பு விமானத்தை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ஏற்பாடு செய்து கொடுத்தது போல், ஜெயலலிதா விவகாரத்தில் பிரதமர் மோடி செயல்பட்டிருந்தால் அவர் உயிருருடன் இருந்திருப்பார் என தமிழக காங்கிரஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைந்து 6 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையால் மீண்டும் அந்த விவகாரம் பேசு பொருளாக அமைந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
''ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை என்பது தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை மட்டுமே.
எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை ஏற்பாடு செய்தார் இந்திரா காந்தி. இதனால்தான் எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார்.
அதேபோல், பிரதமரோ அல்லது மாநில அரசில் உள்ள அமைச்சர்களோ ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மோடி செயல்பட்டிருந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம்.'' இவ்வாறு தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார் கே.எஸ்.அழகிரி.
இதனிடையே ஒரு வாரத்திற்கு முன்னர் இது தொடர்பாக பதிவு வெளியிட்ட காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி ஏன் வரவில்லை என்ற கேள்வியை முன் வைத்திருந்தார்.












Click it and Unblock the Notifications