ஆங்கிலேயர்களின் கைக் கூலிகள் தான் பாஜகவின் மூதாதையர்கள்! தமிழக காங்கிரஸ் கமிட்டி கடும் சாடல்!
சென்னை: ஆங்கிலேயர்களின் கைக் கூலிகள் தான் பாஜகவின் மூதாதையர்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி விமர்சித்துள்ளது.
மேலும், அரசியல்வாதியாக, பா.ஜ.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக, செயல்படும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

வரலாற்று திரிபுவாதம்
''திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சுதந்திரப் போராட்ட வரலாற்றை மக்களை மையப்படுத்தி திருத்தி எழுதப்பட வேண்டும், மகாத்மா காந்தி மட்டுமின்றி பல்வேறு தலைவர்களுடைய பங்களிப்பை அனைவரும் தெரிந்து கொள்கிற வகையில் பதிவு செய்யப்பட வேண்டும், வரலாற்றில் அகிம்சை போராட்டம் தான் அதிக அளவில் பதிவாகியுள்ளது, ஆயுதப் போராட்டங்கள் அதிகம் பதிவாகவில்லை என்று உரையாற்றி வரலாற்று திரிபுவாதம் செய்திருக்கிறார். ''

விடுதலைப் போராட்டங்கள்
''எந்த விடுதலைப் போராட்டத்திலும் இன்றைய பா.ஜ.க.வின் தாய் ஸ்தாபனங்களான இந்து மகா சபையோ, ஆர்.எஸ்.எஸ். அமைப்போ கடுகளவு பங்களிப்பும் அளித்ததில்லை. மாறாக, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு, நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுதலையானதை ஆர்.என். ரவி உள்ளிட்ட எவராலும் மறுக்க இயலாது.''

கைக் கூலிகள்
''பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் ஏஜெண்டுகளாக, கைக் கூலிகளாக இருந்தவர்கள் தான் இன்றைய பா.ஜ.க.வின் மூதாதையர்கள். இத்தகைய கறைபடிந்த அத்தியாயத்தை பின்னணியாகக் கொண்டுள்ள பா.ஜ.க.வின் ஊதுகுழலாக இருக்கிற ஆர்.என். ரவி, விடுதலைப் போராட்ட வரலாற்றை திருத்தி எழுத வேண்டுமென்று கூறுவது அப்பட்டமான ஒரு அரசியல் மோசடியாகும். வரலாறு என்பது வரலாறு தான். அதை யாரும், எவரும் திருத்தி எழுதி விட முடியாது.''

வெற்றி பெற முடியாது
''வரலாற்று உண்மைகளை மூடி மறைத்து திருத்தி எழுத எவர் முயன்றாலும் அவர்கள் வெற்றி பெற முடியாது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், வல்லபாய் படேல், தமிழகத்தில் தந்தை பெரியார், திரு.வி.க., பெருந்தலைவர் காமராஜர், ஜீவா போன்ற எண்ணற்ற தலைவர்களின் கடும் சிறைவாச கொடுமைகளினால் தான் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது என்பதை பா.ஜ.க. மூடிமறைக்க முயன்றாலும், இந்திய மக்கள் அனைவரும் உண்மை வரலாற்றை அறிந்தே வைத்திருக்கிறார்கள். ''

ஆர்.என். ரவி
''இத்தகைய வரலாற்றுப் பெருமைகளை ஆர்.என். ரவி அவர்கள் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்து பொய்யான வரலாற்றை எழுத முயன்றால் அந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது. உண்மைக்கு எதிராக எவரும் வெற்றி பெற முடியாது.'' இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications