கோடை காலத்தில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க ரெடி.. 8,525 மெகாவாட் வாங்க மின் வாரியத்துக்கு அனுமதி!
சென்னை: கோடை கால மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரத்தை வெளிச் சந்தையில் வாங்க மின்சார வாரியத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோடை வெயில் இப்போதே வேலையைக் காட்டி வரும் நிலையில், தடையில்லாமல் மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோடைகாலத்தில் தமிழ்நாட்டின் மின் தேவையானது எப்போதும் அதிகரிக்கும். கோடை வெயில் வாட்டி வதைக்கும் என்பதால் பெரும்பாலானோர் எந்நேரமும் ஃபேன், ஏசி பயன்படுத்துவார்கள் என்பதால் மின் தேவை அதிகரிக்கும். அதன் காரணமாக பல இடங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு மின் வெட்டு நடக்கும். அதைத் தவிர்க்க மின்சார வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆண்டு கோடை காலத்தை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் மின் தேவையானது சுமார் 22 ஆயிரம் மெகா வாட் ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய மின் தேவையை ஈடுசெய்ய வெளி சந்தையிலிருந்து குறுகிய கால ஒப்பந்தம் அடிப்படையில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின் பகிர்மான தளத்திற்கு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி நள்ளிரவு 12 மணி முதல் மாலை 6 மணி வரை என்ற அடிப்படையில் பிப்ரவரி மாதம் 200 மெகா வாட் மார்ச் மாதம் 250 மெகா வாட், ஏப்ரல் மாதம் 1,200 மெகா வாட், மே மாதம் 600 மெகா வாட் என்று மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. பீக் ஹவர்ஸ் எனப்படும் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரையும் பிப்ரவரி மாதம் 540 மெகா வாட், மார்ச் மாதம் 1575 மெகா வாட் மின்சாரம் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எப்ரல் மாதம் 2340 மெகா வாட், மே மாதம் 1320 மெகா வாட் என்ற அடிப்படையில் மொத்தம் 8,525 மெகா வாட் மின்சாரத்தை வெளிச்சந்தையிலிருந்து வாங்க தமிழ் நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை வாரியமானது அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து சந்தையில் டெண்டர் விடுவதற்கான பணியை வெளியிட்டு மின்சாரம் உடனடியாக வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications