1,754 பணியிடம் தானா? டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணையால் தேர்வர்கள் அதிருப்தி..விளக்கம் அளித்த தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி ஆண்டு தேர்வு அட்டவணை அண்மையில் வெளியானது. இதில் ஒராண்டில் 10 போட்டித்தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வந்தவர்களுக்கு பெரும் அதிருப்தியை கொடுத்தது. இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அடுத்த ஆண்டில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது.
இதில் வெறும் 1,754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப் பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அரசுப்பணி கனவுகளோடு படித்து வரும் இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது.

தமிழக அரசு மறுப்பு
இது தொடர்பாக பலரும் பணியிடங்கள் குறைவாக இருப்பதாக அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். அரசியல் தலைவர்களும் இது தொடர்பாக கோரிக்கை விடுத்து இருந்தனர். அதேபோல், சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் தெரிவித்து போட்டித்தேர்வு எழுதுபவர்களும் பல்வேறு தரப்பினரும் ஆதங்கத்தை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு இது தொடர்பாக விளக்கத்தை அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: -

1,754 பணியிடங்கள் மட்டும் தானா?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியிட்டுள்ளதன் அடிப்படையில் ஓராண்டில் 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் முழுமையாக இல்லாததால் தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் என்பதால் அவற்றை மறுத்து பின்வரும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

அட்டவணையில் சேர்த்து வெளியிடப்படும்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் இருந்து நேரடி நியமனத்திற்காக பெறப்படுகின்ற காலிப் பணியிடங்களுக்கான மதிப்பீடுகளின் அடிப்படையில், போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டு வருகிறது. ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த அட்டவணை முதற்கட்டமாக தகவல்களை அளிக்கும் அட்டவணையாகும். இது தொடர்ந்து கூடுதல் பணியிடங்களுக்கான கேட்புகள் பெறப்பட்டு அட்டவணையில் சேர்த்து வெளியிடப்படும்.

செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டு..
இது மட்டுமன்றி, அரசுப் பணியிடங்களுக்கான மற்ற தேர்வு முகமைகளான ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மற்றும் வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஆகியவற்றின் வாயிலாகவும் அரசுப் பணியிடங்களுக்கான தேர்வுகள் ஆண்டு தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாரியங்கள் தவிர, அரசு வேலை வாய்ப்பகங்கள் வாயிலாகவும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டும் பல்வேறு அரசுப் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன.

1063 முகாம்கள்
இவை தவிர, பணிக்காலத்தில் அகால மரணமடையும் அரசுப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையிலான பணிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலமாக கடந்த 1½ ஆண்டில் மொத்தம் ஆயிரத்து 63 முகாம்கள் நடத்தப்பட்டு 1 லட்சத்து 12 ஆயிரத்து 551 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

காலதாமதம் ஏன்
அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடு செய்து, அவற்றை முறையாக நிரப்புவதே அரசின் கொள்கையாகும். அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களையும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யும் நடைமுறையும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பணியிடங்களுக்கான தேர்வு முகமைகளின் மூலம் நடத்தப்படும் சில போட்டித் தேர்வுகளின் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு வருவதும், அப்பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் காலதாமதத்திற்கு ஒரு காரணமாகும்.

அரசு கட்டாயம் மேற்கொள்ளும்
அவ்வாறு வழக்குகள் தொடரப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ள உரிய விதிகளும் இந்த அரசால் பரிசீலனை செய்யப்பட்டு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அரசுத் துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களை முறையாக நிரப்புவதற்கான தொடர் நடவடிக்கையை இந்த அரசு கட்டாயம் மேற்கொள்ளும் என தெளிவுபடுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications