ஆமா.. நிறைய பேருக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் வரவில்லையே ஏன்.. வெளியான "முக்கிய" காரணம்!
சென்னை: தமிழ் தகுதித் தேர்வில் 5 லட்சம் பேர் தோல்வியடைந்ததால், பலருக்கு குரூப் - 4 முடிவு வெளியாகவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. குரூப் - 4 தமிழ் தகுதித் தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு விடைத்தாள் திருத்தப்படும் என்று முதல்முறையாக கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெற்றது.
மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் குரூப் -4 தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது.

குரூப் - 4 தேர்வு
இதற்கிடையே, அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டு விதிகளில் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதால், குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. வழக்கமாக 2 அல்லது 3 மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும்.

8 மாதங்கள் தாமதம்
ஆனால் இந்த முறை 8 மாதமாகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் சர்ச்சை எழுந்தது. சமூக வலைத்தளங்களில் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் இதுகுறித்த ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலானது. இதையடுத்து, இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

முடிவுகள் வெளியீடு
மேலும், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கை 7,381-லிருந்து 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இந்நிலையில், மார்ச் 24ஆம் குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதன்படி முடிவுகள் வெளியிடப்பட்டது.

தேர்வர்கள் அளித்த புகார்
இதனிடையே குரூப் - 4 தேர்வை ஒரே மையத்தில் எழுதிய 2 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதால், தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதுமட்டுமல்லாமல் குரூப் - 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் லட்சக்கணக்கானவர்கள் தங்களது முடிவுகளை அறிய முடியவில்லை என்று புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி விளக்கம்
அதில், குரூப் - 4 தேர்வில் தமிழில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொதுஅறிவு விடைத்தாள் திருத்தப்படும் என்றும், குரூப்-4 தமிழ் தகுதித் தேர்வில் சுமார் 5 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை. தமிழ் தகுதித் தேர்வில் தேர்சி பெறாததால் பலரின் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றால் மட்டுமே பொது அறிவு விடைத்தாள் திருத்தப்படும் என்று விதி முதல்முறையாக கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications