வெளியானது TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள்.. ரிசல்ட்டை பார்ப்பது எப்படி? மார்ச் 26 முதல் நேர்காணல்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, முதல்நிலைத் தோ்வு கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த 2023 ஏப்ரல் மாதம் வெளியானது.
இதைத் தொடர்ந்து, குரூப் 1 முதன்மை தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டன. 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் இந்த தேர்வை எழுதினர். துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் ஆகிய பணியிடங்களுக்கான குரூப் 1 முதன்மை தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின்ஸ் தேர்வு முடிவு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், குரூப் 1 தேர்வு முடிவுகளை விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி -யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in தளத்தில் பார்க்கலாம். டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 26 முதல் நேர்காணல் (வாய்மொழித் தேர்வு) நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications