TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வில் ‘குளறுபடி’.. தவித்த தேர்வர்கள்.. பிற்பகல் தேர்வு நேரம் மாற்றம்!
குரூப் 2 முதன்மைத் தேர்வு எழுதியவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டதில் குளறுபடி ஏற்பட்டது.
சென்னை : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் ஒரு சில மையங்களில் வினாத்தாள் குளறுபடி காரணமாக தேர்வு தொடங்க தாமதம் ஆனது. இதனால் தேர்வு மையங்களில் சலசலப்பு ஏற்பட்டது.
வினாத்தாள்களில் தேர்வர்களின் பதிவு எண் மாறி இருந்ததால் ஏற்பட்ட குழப்பமே தாமதத்திற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
தாமதமாக தேர்வு தொடங்கிய மையங்களில் தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

குரூப் 2 முதன்மை தேர்வு
தமிழ்நாட்டில் உள்ள 5 ஆயிரத்து 446 குரூப் 2 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி குரூப் 2 முதல் நிலைத் தேர்வை நடத்தியது. இந்த நிலையில் குரூப் 2 முதன்மைத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வை 55 ஆயிரத்து 71 பேர் எழுதி வருகின்றனர். குரூப் 2 மெயின் தேர்வு இன்று தாள் 1 காலையிலும் தாள் 2 மாலையிலும் நடத்தப்படுகிறது.

280 மையங்களில்
கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு காலையிலும், பொது அறிவு, பாடங்கள் தொடர்பான தேர்வு பிற்பகலிலும் நடக்கிறது. இந்தத் தேர்வுக்காக, 20 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 280 தேர்வுக் கூடங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. இன்று காலை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு தொடங்கப்பட்டது. சென்னையில் 8, 315 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.

குழப்பம்
சென்னையில் உள்ள சில தேர்வு மையங்களில் குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சென்னை துரைப்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களில் பதிவு எண்கள் மாறி இருந்ததால் 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியிருக்க வேண்டிய நிலையில், வினாத்தாள் வழங்க தாமதமானது. 10 மணிக்கு மேல் தான் அவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது.

பதற்றம்
தேர்வில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் தேர்வர்கள் பதற்றமடைந்தனர். இதே போன்று தமிழகத்தின் புதுக்கோட்டை, விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலும் தாமதமாகத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. எந்தெந்த மையங்களில் தாமதமாகத் தேர்வு தொடங்கியதோ, அந்த மையங்களில் எல்லாம் தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

என்ன காரணம்
கேள்வித்தாள்கள் இருந்த பண்டலை பிரித்து விநியோகம் செய்தபோது ஏற்பட்ட குழப்பமே இந்த குளறுபடிக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. தேர்வு அறைகளுக்கு வினாத்தாள்களை பிரித்துக் கொடுக்கும்போது மாற்றப்பட்டதால் சிறிது குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பங்கள் காரணமாக பிற்பகல் 2 மணிக்கு தொடங்குவதாக இருந்த இரண்டாம் தாள் தேர்வு அரை மணி நேரம் தாமதமாக நடைபெறும். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications