டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள்! விஏஓ முதல் நேர்முக உதவியாளர் வரை! 6244 பணிகளுக்கு நாளை தேர்வு
சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை (ஜூன் 9 ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 6,244 காலி பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தி அதன் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த தேர்வுகளை தமிழக அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்துகிறது.

இளநிலை உதவியாளர் முதல் கோட்டாட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
அந்த வகையில் குரூப் 4 தேர்வுகள் நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில்கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் மற்றும் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் என பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆன்லைனில் இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 30ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை பெறப்பட்டன. குரூப் 4 தேர்வுக்கான அடிப்படை கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்பதுதான். ஆனாலும் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்ஃபில் முடித்தவர்கள் என உயர் கல்வி தகுதி பெற்றவர்கள் உள்பட சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் தகுதியானவர்களுக்கு 2 வாரங்களுக்கு முன்பு ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் குரூப் 4 எழுத்துத் தேர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை3 மணி நேரம் நடைபெறும்.
தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தேர்வுக் கூடத்திற்கு சென்றுவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்வில் பொது தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்தபடி, குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் 2025, ஜனவரி மாதம் வெளியிடப்படும். குரூப் 4 தேர்வுக்கு நேர்காணல் கிடையாது. எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றால் அரசு வேலை கிடைக்கும். குரூப் 4 தேர்வை தொடர்ந்து ஒருங்கிணைந்த குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் 28ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications