சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC.. இன்டர்வியூ முடிந்த சில மணி நேரங்களில் ரிசல்ட்!
சென்னை: சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி. கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த நேர்முகத் தேர்வுகள் இன்றுடன் முடிந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில், காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி, டி.என்.பி.எஸ்.சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு, கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைந்தது. இதில், 6,031 ஆண்களும், 6,005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கான முதல் நிலை தேர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சாவூர், வேலுார், விழுப்புரம் ஆகிய 9 இடங்களில், சிவில் நீதிபதி முதல் நிலை தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு நவம்பரில் நடந்தது.
முதன்மை எழுத்து தேர்வை (மெயின் தேர்வு) கடந்தாண்டு நவம்பர் 4, 5ஆம் தேதிகளில் நடத்தியது டிஎன்பிஎஸ்சி. இந்தத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 472 பேர் அழைக்கப்பட்டனர். இதற்கான முடிவுகள் கடந்த 5ஆம் தேதி வெளியிடப்பட்டது.
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதியான இன்று வரை சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்வர்கள் தங்கள் இணையவழி விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளவாறு அனைத்து மூலச்சான்றிதழ்களுடன் நேரில் வந்து இதில் பங்கேற்றனர்.
இந்நிலையில், சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது சற்று முன்பு டிஎன்பிஎஸ்சி. கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த நேர்முகத் தேர்வுகள் இன்றுடன் முடிந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்.












Click it and Unblock the Notifications