கிளாம்பாக்கத்தில் இருந்து இனி ‘குளு குளு’ன்னு போகலாம்.. பஸ் பயணிகளுக்கு டிஎன்எஸ்டிசி ஸ்பெஷல் அப்டேட்
சென்னை: கோடை கால விடுமுறைக்கு தொலை தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் ஏசி பேருந்துகளில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்எஸ்டிசி அறிவித்துள்ளது.
சென்னையில் பூர்வீகமாக வசித்து வருபவர்களை விட வெளியூரில் இருந்து வசிக்கும் மக்களே அதிகம். பணி நிமித்தமாகவும் தொழில் நிமித்தமாகவும் சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன்பே செட்டில் ஆன மக்கள் பலரும்.. திருவிழா மற்றும் விடுமுறை காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை காண முடிகிறது.

அதிலும் சென்னையில் பணிபுரிந்து வரும் இளைஞர்கள், கல்லுரிகளில் படிக்கும் மாணவர்கள் என பலரும் வார இறுதி நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதை காண முடியும். இதனால், விடுமுறை காலங்களில் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ரயில்களில் டிக்கெட் உடனே விற்று தீர்ந்து விடும் என்பதால், அடுத்து பேருந்துகளையே மக்கள் நாடுகிறார்கள்.
அரசு விரைவு போக்குவரத்து கழகம்: பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளையும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டும் கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
வாட்டி வதைக்கும் வெயில்: ஆனால், தற்போது, பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டதால், அங்கிருந்தே அரசு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. எனவே, இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு செல்ல திட்டமிட்டவரக்ள் கண்டிப்பாக கிளாம்பாக்கம் சென்றே சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும். கோடை வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது.
கூடுதல் ஏசி பஸ்கள்: இரவு நேரத்தில் கூட உஷ்ணம் அதிகமாக இருப்பதால், பயணிகள் சொந்த ஊர் சென்று சேர்வதற்குள் வியர்வையில் குளித்து விடும் சூழல் உள்ளது. இதனால், அதிலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு பயணிக்கும் பயணிகள் பாடு திண்டாட்டம்தான்.. இந்த நிலையில், தான், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு கோடை விடுமுறையில் கூடுதலாக ஏசி பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
458 ஏசி பேருந்துகள்: தற்போது மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழித்தடத்தில் சுமார் 350 ஏசி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோடை காலத்தை கணக்கில் கொண்டு கூடுதலாக 71 ஏசி பேருந்துகள் இணைக்கப்படும் என்றும் இதன் மூலம் 458 ஏசி பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இந்த பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்தும் பயணிக்க முடியும் என்று டிஎன்எஸ்டிசி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications