இந்த வாரம் வரிசையா லீவ்.. வெளியூர் செல்வோர் வசதிக்காக சிறப்பு பேருந்துகள்.. தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: தொடர் விடுமுறை, திருமண முகூர்த்தம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். எந்தெந்த நாட்களில் எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயங்கும் என இங்கு பார்க்கலாம்.
தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களையொட்டி கூடுதல் பயணிகள் வெளியூருக்கு பயணிப்பார்கள் என்ற காரணத்தால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் எந்த, எந்த இடங்களில் இருந்து எந்த ஊருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்பது தொடர்பாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 23/08/2024 (வெள்ளிக் கிழமை முகூர்த்தம்) 24/08/2024 (சனிக்கிழமை), 25/08/2024 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 26/08/2024 அன்று கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 23/08/2024 மற்றும் 24/08/2024 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 23/08/2024 (வெள்ளிக் கிழமை) மற்றும் 24/08/2024 (சனிக் கிழமை) ஆகிய நாட்களில் 485 பேருந்துகளும், மற்றும் 25/08/2024(ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 26/08/2024 (திங்கள் கிழமை) கிருஷ்ண ஜெயந்தி அன்று கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23/08/2024 (வெள்ளிக் கிழமை மற்றும் 24/08/2024 (சனிக்கிழமை) அன்று 70 பேருந்துகளும் மாதவரத்திலிருந்து 23/08/2024 வெள்ளிக் கிழமை மற்றும் 24/08/2024 (சனிக்கிழமை) அன்று 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க
திட்டமிடப்பட்டுள்ளது
திங்களன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவதற்கு அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications