அடித்து நொறுக்கும் வெயில்! தமிழகத்தில் 107 டிகிரியை தொட்ட வெப்பம்..பாதுகாப்பாக இருக்க என்ன செய்யணும்
சென்னை: தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்கியதில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. இன்று மட்டும் 12 இடங்களில் வெப்பம் சதமடித்துள்ளது.
கோடைக் காலத்தில் நமது நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். அதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெப்பம் இப்படித் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. வெப்பம் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
வெப்பம்: இந்தியாவில் இந்தாண்டு பிப். மாதமே வெப்பம் உச்சம் தொட்டது. இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப். மாதம் அதிகபட்ச வெப்பம் பதிவானது. கோடைக் காலத்தில் வெப்பம் இதை விட அதிகமாகவே இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஜன. மாதம் பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், அதன் பின்னர் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இன்றைய தினம் மாநிலத்தில் மொத்தம் 12 இடங்களில் வெப்பம் சதமடித்துள்ளது. அதிகபட்சமாகக் கரூர் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் அதிகபட்ச வெப்பம் ஈரோட்டில் நேற்று 106 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவான நிலையில், இன்று வெப்பம் அதை முறியடித்துள்ளது. கரூர் பரமத்தியில் இன்று 107 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இந்தாண்டு பதிவான அதிகபட்ச வெப்பம் இதுவாகும்.
எங்கெல்லாம் சதமடித்து: கரூரை தொடர்ந்து சேலத்தில் 106 டிகிரி பாரன்ஹூட், ஈரோட்டில் 105 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. வேலூர், திருச்சி தலா 104 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல திருத்தணி, திருப்பத்தூர், மதுரை நகரில் 103 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் உள்ளது. தர்மபுரியில் 102 டிகிரி பாரன்ஹூட்டும், கோவையில் 101 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல பாளையங்கோட்டை, தஞ்சை 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
கோடைக் காலத்தில் வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிகளவில் தண்ணீர், மோர், இளநீரைக் குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகக் குழந்தைகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோடைக் காலங்களில் கான்ஜுன்க்டிவிடிஸ், வறண்ட கண்கள், ஸ்டை மற்றும் கண் அலர்ஜி என்று பல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் கண்களைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். கண்களையும் முகத்தையும் அடிக்கடி கழுவ வேண்டும். அப்போது தான் கண் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.












Click it and Unblock the Notifications