சென்னைக்கு நாளை மகிழ்ச்சிகரமான ஞாயிறாக மாற போகிறது.. ஏன் தெரியுமா?.. வெதர்மேன் விளக்கம்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று இரவும், நாளையும் மழை வெளுத்து வாங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதனால் தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே மழைபெய்து வருகிறது.
ஏற்கெனவே நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலால் ஒன்றரை ஆண்டுகள் கழித்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மழையால் அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

தமிழகம்
இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மினி ஊட்டியாகவே உணரப்படுகிறது. பல வீடுகளில் ஃபேன்களும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று இரவு கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பக்கம்
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் தமிழகத்தில் மழை தொடரும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று இரவும் நாளையும் மழை வெளுத்து வாங்க போகிறது. தென் மேற்கு வங்கக் கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வட தமிழகத்தின் அருகே நிலவுகிறது.

சென்னை- நெல்லூர்
இதனால் இரு வெப்பசலனங்கள் உருவாகியுள்ளன. ஒன்று சென்னை- நெல்லூர் பகுதியிலும் இன்னொன்று மைசூரு டூ ராமநாதபுரம் பகுதியிலும் உருவாகியுள்ளது. ஒரு பக்கம் அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலையால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் தமிழக கடலோரம் அருகே வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டும் சேர்ந்து தமிழகத்தில் பரவலாக கனமழையை கொடுக்கும்.

தமிழக கடலோரம்
வளி மண்டல மேலடுக்கு தமிழக கடலோரத்தை நெருங்குவதால் நெல்லூர்- சென்னை இடையே அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்யும். அடுத்த இரு தினங்களுக்கு சென்னையின் சில இடங்களில் கனமழை பெய்யும். திருவள்ளூர், வட சென்னை பகுதி வளிமண்டல மேலடுக்கு பகுதிக்கு மிக அருகே உள்ளதால் இங்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்பச்சலனம்
மைசூரிலிருந்து ராமநாதபுரம் வரை வெப்பச்சலனம் ஏற்பட்டுள்ளதால் ஈரோடு, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், சேலம், கரூர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 மில்லிமீட்டர் அளவை காட்டிலும் அதிக மழை பெய்யும்.

மேட்டூர் நீர்ப்பிடிப்பு
மேட்டூர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும். மேட்டூர் அணையில் 85 டிஎம்சி தண்ணீர் உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தினமும் 1 முதல் 1.5 டிஎம்சி வரை தண்ணீர் வரத்து உள்ளது. இப்படியே போனால் மேட்டூர் அணை விரைவில் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும். மதுரை- விருதுநகர் வரை இரண்டாவது நாளாக நல்ல மழை பெய்யும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications